ஏப்ரல் 21, 2011

காரணங்களற்றவை

ஒருவனுக்குத் தூக்கம் வராமலிருக்க எதுவேண்டுமானாலும் காரணமாயிருக்கலாம். மன அழுத்தமோ, சோர்வோ, பயமோ, குழப்பமோ காரணமாயிருக்கலாம். சிலருக்கு காரணங்களே தேவையில்லை. ஓர் இரவு முழுவ‌தும் தூக்கம் வராமல் இருக்கலாம் எந்தக் காரணங்களுமே இல்லாமல்.‌
அதேபோல் ஒரு பார்வைக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்பார்கள். எந்த அர்த்தமுமே சொல்லாத ஒரு பார்வைக்குக் கூட காரணமற்ற நிலையே ஒரு அர்த்தமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. தேநீர் கோப்பைக்குள் மூழ்கிவிட்டு, பார்வையை எங்கோ நிறுத்தி, மனதை எங்கோ அசை போடுவது, நம்மில் அனைவருமே அன்றாடம் அனுபவிக்கும் ஒரு நிகழ்வு.

தரையில் நீர்கோலம் போடுவதும், நிழலை நகர்த்தி விளையாடுவதும், கழிவறையில் கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருப்பதும் காரணங்களின்றியே நிகழ்கின்றன.

காரணங்களற்ற நம் செய்கைகளில் படபடப்போ பரபரப்போ காணப்படுவதில்லை. அவை திறந்தவெளிகளைப்போல் பரந்து விரிந்த வானத்தைப் போல் எல்லையற்றுக் கிடக்கின்றன, விவாதிக்கப்படாமலேயே.
ப‌யணிகளின்றி செல்லும் மின்சார இரயில் பெட்டிகளைப் போன்றோ, தேநிலவில் தனித்தனியாய் உறங்கும் இளம் தம்பதிகளைப் போன்றோ, வாழ்க்கை காரணங்களின்றியும் பயணித்துக் கொண்டுதானிருக்கிறது.

அருண் சரவணன்
ஏப்ரல் 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக