ஜூலை 17, 2011

காதலின் நான் ‍‍- அத்தியாயம் ஒன்று


காதலைப் பேசியிருப்பீர்கள். காதலைப் பழித்திருப்பீர்கள். காதலித்திருக்கிறீர்களா என்பது தான் என் கேள்வி.

சும்மா சிரித்துப் பேசியவள், மெனக்கெட்டு கவர்ந்திழுக்கப்பட்டே காதலியானவள், படிப்ஸ் காதல்கள் இவைகளெல்லாம் காதல் என்பீர்கள். நான் இல்லையென்பேன்.

அது முட்டாள்களுக்கே வரும் உணர்வு. அல்லது அறிவாளிகளை முட்டாளாக்கும் முறை.

அது வராது. வந்தால் போகாது. அப்படிப்போனால் அது வரவேயில்லை என்பது தான் உண்மை.

உண்மையான காதலின் அர்த்தம் சொல்கிறேன். அனுபவம் கேட்கிறேன். உண்டா?

இரண்டு வருட நட்பு காதலாய் மாறிய தருணம் அது. அப்போது சிந்திக்க‌வில்லை, மீண்டும் அது நட்பாக மாற வாய்ப்பே இல்லையென்று. வழக்கமான ஓர் இரவின் நீண்ட நெடிய கைபேசி உரையாடலின் ஓரிடத்தில் உடைந்து சிதறி அவளுடைய குரல் என்னில் விழுந்து தெறித்தது.

'என்னை மணந்து கொள் என்றால் நீ சம்மதிப்பாயா அருண் ?'

இரண்டு நிமிடங்கள் கைபேசிகள் இரண்டும் மௌனம் சாதித்தன. நான் இணைப்பை துண்டித்து விட்டேன். குறுக்கும் நெடுக்கும் நடந்தேன். சர்க்கரை நோயாளியாய் மாறிப்போனேன். இதயம் அதிகமாய் படபடத்தது. வியர்த்துக் கொட்டியது. ஒரு பதின்மூன்று முறை அவளை மீண்டும் அழைக்க முயர்சித்தும் தோல்வியடைந்தேன். படுக்கையில் புரண்டு புரண்டு மணி இரண்டாகிப் போனது. என்ன நினைத்தேனோ தெரியவில்லை. தைரியம் வரவழைத்து அவளை அழைத்தேன். தாமதித்தே அழைப்பை ஏற்றாள்.

சிறிய இடைவெளி விட்டு "இணைப்பில் இருக்கிறாயா?" என்றேன். ம் என்றாள். அவள் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கிறாள். அது தெரியாமல் சம்மதம் சொல்லிப் பூரித்தேன், மதில் சுவரை காதலியாய் பாவித்து காதலைச் சொல்ல ஒத்திகை பார்க்கும் ஒரு காதலனைப் போல்.

மறுநாள் 'வழக்கம்' போல் விடிந்தது எங்களுக்குப் பிடிக்கவில்லை. யாரிடமும் சொல்லவுமில்லை. இந்த உலகில் எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த ஒன்று அதுவாகிப் போனது.

இரண்டு வருட நட்பு அன்றோடு பறிபோனது பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் அதே பூங்காவில் மாலை சந்தித்தோம், முதலிரவில் சந்திக்கும் இளம் தம்பதிய‌ரின் மன‌நிலையுடன்.
ஒரு பெயர் மறந்த இளைஞ‌ன் எங்கள் பூங்கா நண்பன். தன் அக்காவின் குழந்தையுடன் வரும் அவன் எங்களை அண்ணா அக்கா என்றே அழைப்பது வழக்கம். அன்றும் அப்படியே அழைத்தான். அவள் என்னை நோக்க நான் அவளை நோக்க நாங்கள் இருவர் சிந்திய புன்முறுவலில் காதல் பிறந்தது.

நான் மழைக்குக் கூட கோவிலில் ஒதுங்காதவன், அந்த இரவின் சாரல் மழையில் அவளுக்காக ஒதுங்கினேன். அவள் என்னை அர்ச்சனைக்கு அழைக்கமாட்டாள் என்று எனக்குத் தெரியும். இருந்தும் கூடவே சென்றேன். கண்களில் ஒற்றிக்கொண்டு துள‌சி வாங்கினாள். நான் குங்குமம் பெற்றேன். அடுத்து என்ன நடந்திருக்குமென்று இப்போது நீங்கள் யூகிப்பது எனக்குப் புரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதான் நடந்த‌து. அவள் எதிர்பாராமல் அவள் நெற்றியில் திலகமிட்டேன். எத்தனை சினிமா பார்த்திருக்கிறோம், இது கூடத் தெரியாத மரமண்டையா நான்.  அது இருக்கட்டும், அவள் கண்கள் கலங்கியிருந்தன. மழை குறைந்திருந்தது.

ஒரு குடையின் கீழ் இருவரும் நடந்தோம். குடையும் மழையும் எங்களுடன் சேர்ந்தே நடந்தன.  மழைத்துளி படாமலிருக்க நாங்கள் நன்றாகவே பட்டுக்கொண்டோம். இந்தக் குடையின் அளவிலேயே ஒரு குடிலும் வாகனமும் இருந்தால் வாழ்க்கை எத்தனை அழ‌காக பயணித்திருக்குமென்று நினைத்துக் கொண்டே நடந்தோம். அவளையும் குடையினையும் அவளுடைய விடுதியில் விட்டுவிட்டு  நானும் மழையும் மெல்ல நடந்தோம் அடுத்த தெருவில் உள்ள என் அறை நோக்கி. எங்கள் முதலிரவு அன்று நடக்கவில்லை.

காதல் வளரும் என்ற நம்பிக்கையில் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக