ஜூலை 24, 2011

காதலின் நான் - அத்தியாயம் நான்கு

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று


திருமணத்திற்குப் பின் செத்துப் போய்விடுகிற பொறுமை, தூக்கில் தொங்க விட்டாலும் காதலிக்கும் பொழுது சாகாது. எங்கள் காதலின் சாராம்சமே என் பொறுமையும் அதனை கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கிப் பார்க்கும் அவளுடைய‌ செய்கைகளும் தான்.

அந்த இரவின் மௌன‌த்தில் இருவரும் மெல்ல நடந்தோம், அந்த‌ மௌனத்தைக் களைக்கும் எண்ணமே இல்லாமல். அவள் முகத்தில் ஒரு குழந்தையிடம் தெரியும் பயமும், என் முகத்தில் தொலைந்த ஒன்று மீண்டும் கிடைத்த திருப்தியும் தெளிவாகத் தெரிந்தன, தெரு விளக்குகளின் மங்கிய ஒளியில் கூட.

விடுதியின் வாயிலில் சிறிய புன்னகையை உதிர்த்துவிட்டு அவளிடம் விடைபெற்றேன். அந்த இரவு மிகவும் கணமாகவும் நீளமாகவும் இருப்பதாக நினைத்துக் கொண்டே ஏதோ ஒரு தருணத்தில் உறங்கிப் போனேன்.

அழகிய தீயே படத்தில் "விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்" அடிக்கடி அவள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடல். இன்றும் கூட பயணத்திலோ விடுமுறை நாட்களிலோ காதுகளை உரசி பழைய நினைவலைகளில் சலனத்தை உண்டாக்கிவிடும் பாடல் அது.

"என்னிடம் ஏதேனும் குறை இருக்கிறதா அருண்?" என்று ஏதுமறியா குழந்தையைப் போல அடிக்கடி கேட்கும் அதே கேள்வியையே கேட்டுத் தொலைப்பாள். நானும் சலிக்காமல், "தற்போதைக்கு உன்னிடம் குறையேதும் இல்லை. இருப்பின் புகார் தருகிறேன். தக்க நடவடிக்கை எடு." என்று சிரித்துக் கொண்டே பதிலளிப்பேன்.

தன் அம்மாவின் சமையலை மிகவும் நேசிப்பாள். அதனை தவறவிடுவதை எண்ணி அடிக்கடி வருத்தமடைவாள் என்னைப் போலவே. பூங்கா தவிர்த்து நாங்கள் வழக்கமாக சந்திக்கும் பழச்சாற்றுக் கடையில் அவளை அடிக்கடி காணமுடியும், என்னுடன் சேர்த்தோ அல்லது அவளுடைய நண்பர்களுடன் சேர்த்தோ. ஒரு முறை கடைக்காரர் அரை மணி நேரமாக என்ன பழச்சாறு வேண்டுமென்று எங்கள் இருவரையும் கேட்ட வண்ணம் இருந்தார். நான் அவளைக் கைகாட்ட அவள் என்னைக் கைகாட்ட அந்த விளையாட்டு எங்களுக்கு மிகவும் பிடித்தமானதாகி விட்டது.

கடலின் அலைகளைப் போன்று அவள் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பாள். கரையாய் நான் காய்ந்து நனைந்து காய்ந்து நனைந்து காத்துக் கிடந்தேன்.

அலைகள் ஓய்வதில்லை, பாயும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக