ஜூலை 30, 2011

காதலின் நான் - அத்தியாயம் ஆறு

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
அத்தியாயம் ஐந்து 

அந்த இரவு எங்கள் இருவருக்கும் நேர்ந்த இடைவெளியை மீண்டும் மழை பெய்யச் செய்து நிரப்பிக் கொண்டது.

இடம் பொருள் பார்க்காமல் ஈவு இரக்கம் காட்டாமல் வருகின்ற காதல், வந்த வழியே சொல்லிக் கொள்ளாமல் திரும்பிச்சென்று விடுகிறது, மழை மேகங்களைப் போல‌.

அன்றைய மாலைப்பொழுதில் தெருவில் நின்று பிறர் காண‌ கண்ணீர் விட நேரிடும் என்று முன்னமே எதிர்பார்க்கவில்லை.

உங்களில் பெரும்பாலானோர் பின்னால் வாகனம் வருவது அறியாமல் மோதி விழுமுன் வசை வாங்கியிருந்திருப்பீர்கள் என்று தோன்றவில்லை.

டெலிபோன் பூத்தில் வரிசையில் காத்திருப்போரை மறந்து கதறும் வாய்ப்பு உங்களுக்கு கிட்டியிருக்காதென்றே நினைக்கிறேன்.

பிரிவிற்கான‌ காரணத்தைக் கண்டறிந்து களைய முற்பட்டேன். எத்தனையொ முறை மன்றாடிக் கேட்டுப் பார்த்தேன். "என்ன குறை கண்டாய் என்னில்?" என்று.

அவள் தந்த பதில்கள் அனைத்துமே மௌனம் மட்டும் தான். உலகிலேயே மிகவும் கொடூரமான‌ ஆயுதம் மௌனம் மட்டும் தான். எனக்கு அந்த மௌனம் சம்மதமில்லை.

காதல் என்ற போதைக்கு அடிமையானவனை எதுவுமற்ற அறையில் திடீரென்று அடைத்துவிட்டாள்.

மீண்டும் குழந்தையாக்கி அழகுபார்த்துவிட்டு கொடுத்த‌ பொம்மையைப் பிடுங்கிக்கொண்டாள்.

‌நம்பிக்கை துரோகம் என்பது வாழ்க்கையில் எத்தனை பக்குவப்பட்டவனையும் கூட எதற்கும் கவலைப்படாதவனையும் கூட அழவைத்துப் பார்க்கும் ஆயுதம். அவளுடைய அந்த கூர்மையான கேள்விக்கணைக்கு உள்ளான நிராயுதபாணியாகிப் போனேன்.

ஒரு உறக்கம் தொலைந்த அதிகாலையில் என் கைபேசி அழைப்புகளை ஏற்பதையும் கூட நிறுத்திக் கொண்டாள்.

அது போன்ற தருணங்களில் கோபம், வெறுப்பு, சோகம், பயம், பொறுமை: இவையனைத்தும் ஒரு சேர ஒருவனை ஆட்கொண்டால் என்னவாகும்?

பல் துலக்காமல் குளிக்காமல் அவள் விடுதியினைத் தாண்டி தினமும் அவள் செல்லும் வழியில், அடைக்கப்பட்ட ஒரு கடையின் வாசலில் அமர்ந்து இந்த வழியில் வருவாளா? மாட்டாளா என்றே தெரியாமல் காலை முதல் மாலை வரை மாலை முதல் இரவு வரை சாலையினையே வெறித்துப் பார்த்து ஏங்கிச் செத்த நிமிடங்கள் இன்னும் நெஞ்சில் இரணமாய் இருக்கின்றன‌.

எதையோ தொலைத்து விட்ட பதற்றமும் பரிதவிப்பும் மனதில் அமைதியை கலைத்துவிட்டன. ஒவ்வொரு விநாடியும் அவள் என்ன செய்கிறாள்? எங்கு இருக்கிறாள்? என்று தெரிந்து வைத்துக்கொண்டிருந்த மனம் தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் பல்லியின் உடலிலிருந்து அறுபட்ட வாலினைப் போல் துடிக்கிறது.

இந்த உலகில் நண்பர்கள் போல் நடிக்கத் தெரியாத அப்பாவிகளே காதலித்து அவதிப்படுகிறார்கள்.

நட்பையும் காதலையும் ஒரு சேரத் தொலைத்த முட்டாளாகிப் போனேன். நண்பர்கள் காதலர்களாக மாறிக்கொண்டிருக்கையில் நட்பு இருவருக்கும் உள்ள நெருக்கத்தில் நசுங்கிச் செத்துவிடுகிறது. காமம் அங்கே கால் நீட்டி உட்கார்ந்துகொள்கிறது. சிலருக்கு அது கூச்சத்தையும் வெட்கத்தையும் தருகிறது. சிலருக்கு அது வெறுப்பையும் அருவருப்பையும் தருகிறது. திருமணமானவர்களுக்கு அது நிர்ப்பந்தம். காதலிப்பவர்களுக்கு அது அவரவர் சௌகரியம்.

காதலை இழந்த துயரம் தாங்காமல் உயிரைக் கொடுக்கத் துணிவில்லாம‌ல் மயிரைக் கொடுத்து விடைபெற்ற இந்த ‌வெட்கங்கெட்டவனின் காதல் கதை அன்றோடு முடிந்துவிட்டது.

என்றோ ஒரு நாள் இடதுகையில் ஊசியால் எழுதிய அவளுடைய பெயர் சொல்லும் தழும்புகள் ‌இப்பொழுது மறைந்துவிட்டன.

முற்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக