அக்டோபர் 19, 2011

காதலின் நான் - அத்தியாயம் ஒன்பது

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
அத்தியாயம் ஐந்து 
அத்தியாயம் ஆறு
அத்தியாயம் ஏழு
அத்தியாயம் எட்டு

பழைய பஸ் பாஸை ரினீவல் செய்யலாம். பழைய காதலை ரினீவல் செய்ய இயலுமா?

நான் இராமச்சந்திரமூர்த்தியும் இல்லை. இராவணனும் இல்லை. ஆனால் என் கதையில் வேண்டுமென்றே ஒரு சூர்ப்பனகை உருவாக்கப்படுகிறாள்.

அன்றும் சரி. இன்றும் சரி. அவள் செய்வதற்கெல்லாம் சித்ரவதை என்று தான் பெயர். ஆனால் இந்த தேவதையின் திருவிளையாடல்களில் எனக்குச் சம்மதமில்லை.

பந்து உதைபட்டுத் திரும்பலாம். இந்த பாழாய்ப்போன காதலுமா?

ஓர் இரவில் மனைவியறியாமல் பரண் மேல் பல வருடங்களாக உறங்கிக் கொண்டிருந்த காதல் மடல்களையும் வாழ்த்து அட்டைகளையும் எடுத்துப் புரட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன்.

பழைய நினைவுகள் கண்முன்விரியத் தொடங்கின.

ஆறு வருடங்களுக்கு முன் ஒரு மழை நாளில்... இந்த மழை வரும் பொழுது காதல் வருகின்றதா? அல்லது காதல் வரும் பொழுதெல்லாம் மழை வருகின்றதா என்று வெகு நாட்களாகவே எனக்கொரு சந்தேகம்.

ஆறு வருடங்களுக்கு முன் ஒரு மழை நாளின் மாலை நேரத்தில் அவளுக்கு "அசைவம்" சலித்து விட்டதோ என்னவோ ஒரு உயர்தர சைவ உணவகத்திற்கு என்னை அழைத்துச் சென்றாள். "அருண்! இங்கு சில ஸ்பெஷல் ஐட்டங்கள் கிடைகும். சாப்பிட்டுப் பார். அசந்து விடுவாய்!" என்றாள். நான் மனதுக்குள் ஒன்றை நினைத்துக் கொண்டே அவளைப் பார்க்கிறேன். அவள் "ச்சீ" என்றாள்.

"ஏ அருண்! இங்கு குழிப்பனியாரம் ரொம்ப ஸ்பெஷல். ரெண்டு ப்ளேட் குழிப்பனியாரம் கொண்டு வாங்க".

எண்ணெய் சொட்டச் சொட்ட காரக் குழிப்பனியாரமும் கொத்துமல்லிச் சட்னியும் எங்கள் மேசையில் வைக்கப்பட்டன. அவள் ஒரு பனியாரத்தைப் பிய்த்து சிறு துண்டை சுவைத்து விட்டு கன்னத்தில் குழி விழ பூரித்தாள்.

"இதுதான் அந்தக் குழி. நான் தான் அதில் விழுந்த பனியாரமோ?" என நினைத்துக் கொண்டேன். அந்த மாலைச் சிற்றுண்டியின் இறுதியில் அவள் கொடுத்து அச‌த்திய வாழ்த்து அட்டை இன்னும் முனை மடங்காமல் அவள் வாசம் குறையாமல் அப்படியே இன்றளவும் இருக்கிறது.

ஒரு அலுவலக நாளில் கலாசார உடையணிந்து அனைவரும் வரவேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள். அன்று முற்பகல் இடைவேளையில் நான் என் தளத்திலிருந்து படியிறங்கிக்கொண்டிருந்தேன். எதிரில் அவள் என்னைக் கடந்து படியேற நான் சற்றே திகைத்து நின்றேன்.

அதே புடவை. அதே கருஞ்சிவப்பு(maroon) நிற பட்டுப்புடவை அணிந்திருந்தாள். அந்தப் புடவையை என்னால் அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது. நான் பார்த்துப் பார்த்து வாங்கிப் பரிசளித்த புடவை அல்லவா அது.

எது நடந்ததோ அது அன்று நன்றாக நடக்கவில்லை. மறந்தேன்.
எது நடக்கின்றதோ அதுவும் இன்று நன்றாக நடக்கவில்லை. சரிகின்றேன்.
எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாக நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

சில சமயங்களில் நிகழ்காலத்தை எட்டிப் பார்க்கும் இறந்தகாலம், எதிர்காலத்தை குலைத்துவிடுகிறது.

- கால‌ச்சக்கரம் சுழ‌லும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக