அக்டோபர் 19, 2011

காதலின் நான் - அத்தியாயம் பத்து

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
அத்தியாயம் ஐந்து 
அத்தியாயம் ஆறு
அத்தியாயம் ஏழு
அத்தியாயம் எட்டு
அத்தியாயம் ஒன்பது


மீண்டும் சந்திக்கவே கூடாதென்று வாழ்ந்துகொண்டிருந்தவர்களை காலவெள்ளம் ஒரே தீவில் ஒருவர் பின் ஒருவராக கரைசேர்த்துவிட்டது. இத்தீவை விட்டுத் திரும்பிச் செல்ல முடியாத குடும்பச்சூழலில் இருவருமே சிக்கித் தவித்தோம்.

காதலை துச்சமெனக் கருதும் நண்பர்களுக்கு இந்தப் புலம்பல்கள் எரிச்சலைத் த‌ரலாம். மேலும் பரிகசிக்கக் கூடத் தோன்றலாம். சொல்லப்போனால் காதல் என்று ஒரு தனிப்பட்ட உணர்வோ வேறு எந்த ஒரு மண்ணும் இப்பூவுலகில் கிடையாது. மனிதன் கொள்ளும் ஆசைகளில் அதுவும் ஓர் அங்கம். அவ்வளவே. நம்மிடம் சில நாட்கள் பழகிவிட்டுப் பிரியமுடியாமல் வாலை ஆட்டி நம் பின்னாலேயே ஓடிவரும் ஒரு நாயிடம் என்ன உணர்வு உள்ளதோ அவ்வளவே காதல் என்பதும் கூட. பழகிக் கலக்கும் அனைத்து உயிர்களுக்கும் காதல் பொதுவே.

பாரதிக்குத் தமிழின் மீது தீராத காதல். பாகிஸ்தானுக்கு காஷ்மீரின் மேல்.களம் வேறே தவிர காதல் ஒன்றுதான்.

வாழ்க்கை சதுரங்க ஆட்டத்தைப் போன்றது. அடுத்த கணம் எந்தத் தாக்குதலுக்கும் நம்மை தயார் செய்து முன்னேறும் முயற்சியே வாழ்வின் அம்சம். அதில் முன்னெச்சரிக்கையாக செயல்படுபவனும் அனுபவப்பட்டவனுமே பிழைத்துக் கொள்வான்.

உணர்வுகளுக்கு மட்டுமே முழுதும் அடிமையானவன் இக்கலியுகத்தில் நிம்மதியாக வாழவே முடியாது. ஒரு போர்க்களத்தில் நின்று போராடும் வீரனுக்குரிய மனநிலையிலேயே வாழ்வினை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு கோழைக்கு அங்கே என்ன நடக்குமென்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அப்படிப்பட்ட ஒரு கோழையாக உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு குற்றவாளியாக நிற்கின்றேன்.

நான் என்ப‌து யாதெனின் ‍-
  • மனதைக் கல்லாக்கும் கலையை அறிந்திராதவன்;
  • பூவிதழின் மென்மையினை விடவும் மெல்லிய இதயத்தைக் கொண்டவன்;
  • காதலை இட்டுச்செல்லவும் அப்படியெ விட்டுச்செல்லவும் தெரியாதவன்;
  • வரலாற்றில் இலக்கியங்களில் திரைப்படங்களில் வாழ்ந்து மறைந்த காதலை வாழ்வோடு பொருத்த முயன்று தோற்றவன்;
பொங்கிப்பெருகி ஓடும் நதி, வற்றி மீண்டும் ஓடையாய் இளைத்தோடும் வேளையில் உயிர் பெற்று உருவாகி நீந்தும் மீனுக்குத் தெரியுமா, வலையில் சிக்குவோமா? ஓடை வற்றும் வெயிலில் சிக்குவோமா என்று.

- நதி பாயும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக