வாக்கப்பட்டவன் பொண்டுகன்னு
வெளக்கமாத்தால தொரத்துனேன்.
கழட்டிப் போட்ட அந்தத் தாலி தான்
வெரட்டி ஓட்டுதிந்த வாழ்க்கய.
வருசம் போகுது,
என் உருவம் போகுது.
அப்பன் ஊத்தும் கஞ்சி தான்
எத்தன நாளைக்கு இனிக்குமோ?
பரிசம் போட வந்த மாப்பிள்ள
எல்லாம் போயி சங்கதி போடல.
காட்டு வெலங்கு கூட கூடுதே,
இந்த நாட்டுச் சிறுக்கிக்கென்ன கொறச்சலு?
முப்பது வருசமும் போனதே
மூப்பு எப்ப வரும் தெரியல.
குத்த வச்சதென் பாவமா?
இன்னும் கன்னி கழியாம நிக்குறேன்.
ஒடம்ப தனிச்சு வச்சா கொடுமடா!
இத ஒரக்க சொன்னா அவ தாசியா?
அத ருசிச்சு தின்ன வரும் நாயெல்லாம்
அடிச்சு வெரட்டுனா பத்தினி.
நதியும் கடலும் ஒன்னா சேரலாம்.
பரிசல் கரையயும் சேரலாம்.
இந்த பாவி எப்ப கர சேருவா?
வாழ்க்க பாசம்போல வழுக்குதே.
இனி வீணா ஏங்கி நான் தவிக்கிறேன்.
ஒத்தப் பனமரமா நிக்குறேன்.
செத்துப் பொழச்சு ஏன் வாழறேன்?
சுத்தி அடிக்குதென்ன சாமிதான்.
சுருங்கிப் போச்சு என் பூமிதான்.
எட்டுக்குத்துக்கு எளையதெல்லாம்
புள்ள குட்டியோட போகுதே.
என் காம்ப கசக்கித் தான் பாக்குறேன்,
எலவு ஒன்னுமே வரலயே, ஏங்குறேன்.
நாலு மொலத்துல கயிறு வாங்கி
நாண்டுகிட்டு நான் சாகவா?
ஓலப்பாயில ஒத்தயா
ஒடுங்கி படுத்ததும் பாடையா?
பொணமா வாழுமிந்த
பொழப்பெல்லாம் போதும் போதுமே போங்கடா.
ஆம்பளைக்கு என்ன வந்தாலும்
ஔசாரிகிட்ட போவானே.
பொட்ட முன்டையா பொறந்ததால்
பூசி மொழுகுறேன் மொத்தமா.
சோடி கெடைக்காம கிளியொன்னு
சிறகொடிஞ்சு தவிக்குது.
மானம் மசுரு தான் பெருசுன்னு
மக்கா சாகாம கெடக்கும் உசுரிது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக