டிசம்பர் 13, 2011

தாய்க்கெழவி

விட்டகொற தொட்டகொறையா
விழியோரம் தேங்குறத‌
உன் மகபுள்ளபேரன் நான்
உனக்காக எழுதிவச்சேன்.

முழுசா மூப்படஞ்சு
உருவம் உருக்கொலஞ்சு
ஒடம்ப கழட்டிப்போட்டு
ஊர்கோலம் போனவளே!

உன் சாவுக்கு வந்தவுக‌
வைரம் பாய்ஞ்ச கட்டயினு
வாய்க்கு வாய் சொன்னாக.

கட்ட வேகுமுன்ன‌
சொத்த கணக்குப்பாக்கும்
கேடுகெட்ட ஒலகமிது.

நீ ஏழேழு தலமுறைக்கும்
எழுதிவச்ச சொத்தெல்லாம்
பிடிச்சுவச்ச உன் உசுருதான்டி.
இப்ப அது பிரிஞ்சிபோனது பிடிக்கல.

வெளிப்பார்வை, ஒலகத்துக்கு
வெலகிப்போயி மறஞ்சிருக்க.
மரணம் ஒடம்புக்குத்தான்,
மனசெல்லாம் நெறஞ்சிருக்க.

சேதிகேட்டு சென்னையில‌
பதறாமத்தானிருந்தேன்.
ஊருவந்து பாக்கயில‌
ஒதறுதடி நெஞ்சமெல்லாம்.

நீ இல்லாத அறையிலெல்லாம்
சொல்லாத கதையெல்லாம்
செல்லாத காசாட்டம்
பழங்கதையாப் போனதடி.

ஊருக்கும் நாட்டுக்கும்
வரலாறு பலவுண்டு.
என் வீட்டுக்கும் காட்டுக்கும்
சரித்திரம் நீதானே.

தாந்தோன்றி மலைப்பக்கம்
வேரூன்றி வந்தவளே!
என் தாய்வழிச் சீதனமே!
தென்னவளே! மாருத‌மே!

ஓம்மகள நீ வளத்த.
அவமகளயும் நீதான் வளத்த.
பத்தாக்கொறைக்கு
அவமக, என் தங்கச்சியயும்
நீதான் சொமந்த.

தண்டுவடம் வளஞ்சுபோயி
நீ தடுமாறித் திரியையில,
கழுவி உன்னக் குளிப்பாட்டி
தாயானா தங்கச்சி.
கொழந்தயா மாறிப்போன
எங்கொலசாமி நீதானே.

சூரியன கும்பிடாம‌
ஓன் ஒலகம் விடியாது.
ஓங்கதய கேக்காம‌
ஏன் இரவும் முடியாது.

எஞ்சீயானின் பேர‌ கேட்டோம்,
நீ சாகும்வர சொல்லலியே.
செத்தைய கும்பிடுன்னு
சுருக்க‌மா சொல்லிப்புட்டு
புருசன்பேர‌ புதிரா தந்துபுட்டு
பூமியவிட்டுப் போனவளே!
குப்புசாமி பொஞ்சாதி
தவறிடுச்சுன்னு ஊர்பூராம்
நீ செத்த சேதியோட
சீயான் பேரும்
சேர்ந்தே வந்த‌தடி!

மருமக்க வீடுகள்ல
கை நனைக்க கூடாதுன்னு
வேப்பம்பழம் சுள்ளி பொறுக்கி
சந்தையில வித்த பணம்,
பென்ஷன்காசு ஐநூறும்
மாசாமாசம் வாங்கி வச்சு
சொந்தமா ஓட்டுவீட்டில்
சொகமா வாழ்ந்தவளே!

உன் வைராக்கியத்துக்கு முன்னால‌
இந்த உலகமெலாம் தவிடுபொடி.

கொலையாம சோறு வடிச்சு
கூட்டுரசம் பொரியல் செஞ்சு
எலந்தப்பழ‌ மிட்டாய் தட்டி
என் ஒருத்தனுக்கா படச்சவளே!

கரூருக்கு ஒருவாட்டி
காந்தி வந்த கத சொன்ன.
கையெடுத்துக் கும்பிட்டுட்டு
அண்ணல் போன வழி சொன்ன.

எம்சியாரு சிவாசின்னா
எம்பூட்டு உசுருனக்கு.
உன் சந்ததிக்குத் தெரியாதா
நீ சகலகலா இரசிகையின்னு.

என்ன பெத்தவளின்
ஆத்தாளப் பெத்தவளே!
நான் பெத்தவள பாக்குமுன்ன‌
பரலோகம் போனவளே!
உன் அஞ்சாம் தலைமுறைய‌
நீ அருகயிருந்து பாக்கலயே!

இருந்தாலும் நெனச்சுகிட்டேன்,
அடுத்த தலமுறையா
அவதரிச்சு வந்தவளே,
எம்மகளா பொறந்து வந்த‌
மீனாட்சி நீதான்னு.

டிசம்பர் 08, 2011

சாத்தான் ஓதும் வேதம்

சாத்தான் ஓதும் வேதம் இந்நாட்டில் நாசிக் என்னும் இடத்தில் பல்வேறு பதிப்புகளாக அச்சடிக்கப்பட்டு வருகின்றது. நம் அனைவராலும் வாழ்க்கையை அறியும் நோக்கில் இவ்வேதம் வாசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதன் மூலம் பொருள் சேர்க்கும் பொருள் விளங்கா மாயலோகத்திற்குள் லயித்துக்கிடக்கிறோம்.

சகல இன்பங்களையும் நம் முன் வைத்துக்கொண்டு அதனை சிலர் மட்டுமே அனுபவிக்க பலர் அனுபவிக்க முடியா வண்ணம் ஏற்றத்தாழ்வுகளை வைத்துக்கொண்டு "எதற்கும் ஆசைப்படாதே" என்றால் எந்த வகையில் அது நியாயமாகும்? புத்தனுக்கு போதி மர நிழலில் சித்தம் களங்கியிருக்க வேண்டும். மனிதனுக்கு ஆசை எந்நாளில் தோன்றியதென்று யாரேனும் அறுதியிட்டுக் கூற இயலுமா?

ஒரு ஆதிவாசிக்கும் நமக்கும் என்ன வேறுபாடு? அவன் நம்மைப் போல மின் கட்டணம் செலுத்துவதில்லை. மின் தடையால் அவதியுறுவதில்லை. நம்மைவிடவும் நிம்மதியான சூழலில் நல்ல உணவுண்டு நன்கு உறங்கி வாழ்ந்து வருகிறான். இதில் யார் பின் தங்கியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நம்மிடம் காசு இல்லையென்றால் நாய் கூட மதிக்காது என்ற நிர்க்கதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சோற்றுக்கு அலைந்தோம். சோறு கிடைத்த பின் சொகுசுக்கு அலைந்தோம். சொகுசு கிடைத்த பின் சும்மா இருந்தோமா? புகழுக்கு அலைந்தோம். பின் அதிகாரம், ஆட்டம், பாட்டம், முக்தி, மோட்சம், இன்ன பிற. எதனைத் தேடி அலையாமல் இருந்தோம்? இழப்பதற்கோ பெறுவதற்கோ ஒன்றுமில்லை என்பதல்லவா உண்மையான பூரண சுதந்திரம், நிம்மதி எனப்படுவது.

வாழ்க்கையை நாம் துரத்திக்கொண்டு ஓடவில்லை. வாழ்க்கை தான் நம்மை துரத்தியடிக்கிறது. பணங்காய்க்கும் மரங்களாகும் முயற்சியில் வாடி வளர்ந்து காய்ந்து கருகி பூத்து பொசுங்கிக் கிடக்கிறோம்.

வாழும் காலம் முழுதும் பொருள் தேடி பொருள் சேர்த்து வாழ மறந்தவர்கள் நாம். ஆயிரம் அறைகள் கொண்ட மாளிகை நமக்குச் சொந்தமாயினும் நாம் உறங்கப் போவது ஓர் அறையில் தான். ஆயிரம் ஏக்கர் நிலத்தை அபக‌ரிப்பவன் ஒரு ஊரையே வளைத்துப் போட்டாலும் அவனுக்கும் ஆறடிதான் கடைசியில் மிஞ்சும்.

தன் இரைக்காக அலையும் விலங்கு கூட அடுத்த சிற்சில வேளைகளுக்கு மேல் இரையைச் சேமிப்பதில்லை. நம் பாத்திரம் மட்டும் ஊற்ற ஊற்ற நிரம்புவதேயில்லை.

தலைக்குமேல் கடன் இருந்தாலும் சரி, மடியில் அளவுக்கு மீறிய கணம் இருந்தாலும் சரி, தூக்கம் நிச்சயமாக வராது, எந்த மாளிகையில் படுத்தாலும்.

நாம் அனைவருமே பிச்சை தான் எடுத்துக்கொண்டிருக்கிறோம், பாத்திரத்தின் அளவுதான் வேறே தவிர பிச்சை ஒன்று தான். நம் உழைப்பு எல்லாம் ஆசையெனும் விழலுக்கு இறைக்கும் நீரே.

பணம் என்ற காகிததாள் நம்மை கட்டி ஆண்டுகொண்டிருக்கிறது. ஆறறிவு கொண்ட மனிதன் தன் ஆறாம் அறிவால் படைத்த பணமே அவனை அடிமையாக்கி வைத்திருக்கிறது.

எத்தனை கேவல‌மான ஈனப்பிறவிகள் நாம்?