ஜூன் 21, 2011

சென்னை மாநரகம்

இந்தப் பதிவைப் படித்து நேரத்தை வீணடிப்பது உங்கள் பிரியம். மீறி வீணடித்தால் நான் பொறுப்பல்ல.

தொழிலும் தொழில் சார்ந்த இடமும் சென்னை என்றாகிவிட்டது. இனி செத்தாலென்ன. பிழைத்தாலென்ன. வீட்டிலிருந்து இங்கு விரட்டியடிக்கப்பட்ட ஜென்மங்க‌ளுக்கு இந்தப் பதிவை சமர்ப்பணம் செய்கிறேன்.

துபாய், சிங்கப்பூருக்கு இது தேவலை என்று சப்பைக்கட்டு கட்டும் கனவான்களே!
கைபேசிக்குள் குடும்பம் நடத்தும் மென்பொருள் அநாதைகளே! நலமா? "ஆம். நலம்" என்ற‌ கொடூரமான பொய்யை சர்வ சாதாரணமாக‌ச் சொல்லப் பழகிவிட்டீர்கள், போகட்டும் விடுங்கள்.

அது என்ன? ஆம்பூர் ப்ளைன் பிரியாணியா சாப்பிடுகிறீர்கள்? கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டால் அடடா! என்ன ருசி?  தவுட்டையும் புண்ணாக்கையும் கலந்து அடித்தாற்போல் இருக்கும். அருகில் தண்ணீர் இல்லையேல் விக்கிச் சாவுங்கள்.

சென்ற நேர்முகத்தேர்வில் சொதப்பிய கடுப்பும் வெளியே வந்து ஒண்ணுக்கு அடிக்க இடம் கிடைக்காமல் சென்னை வீதிகளில் அலைந்து திரிந்த சோகமும் உங்கள் முகத்தில் தெரிகிறது நண்பா. மனம் தளராதே. இடம் கிடைக்கும் இரண்டுக்கும். விடாமல் தேடு.

ஆங்கிலம் சரியாக வராமல் கால் சென்டரில் 'ஐ ஆம் லைக் ஆக்டர் விஜய். ஹி குட் ஆக்டிங்' என்று குரூப் டிஸ்கஷனில் குண்டியைத் தூக்கிய கண்மணிகளே! கவலை வேண்டாம். வேறு எங்காவது ஒரு விஜய் ரசிகர் பேனலில் இருப்பார்.

எதிலுமே சேராத மூன்று வகையறாக்கள் உண்டு இங்கே.
ஒன்று, சினிமா எடுக்கப் போய் மூன்று வருடமாகியும் சொந்தாமாய் ஒரு ஜட்டிகூட எடுக்காத சங்கர்கள்.
இர‌ண்டாவது, எஸ். ரா வையும் மனுஷ்யபுத்திரனையும் இரண்டுமுறை புத்தகக் கண்காட்சியிலோ வேறு எங்காவதோ பார்த்துவிட்டு பல வருடங்களுக்கு அதையே பீற்றிக்கொண்டு அலையும் இலக்கிய எத்தர்கள்.
மூன்றாவது, இவர்கள் தான் அதிமேதாவிகள். அரசியல், கலை, வரலாறு எல்லாம் பேசுவார்கள். சீமான், சாரு, மார்க்ஸ், பெரியார்தாசன் பேச்சைக்கேட்டாலே அப்படியே புல்லரித்து விடும் இந்தப் புரட்சிப் புடுங்கிகளுக்கு.

உலகில் பழக முடியாத ஒரு மொழி ஒன்று உண்டென்றால் அது இதுதான். கீழே படியுங்கள். பேருந்தில் ஒரு பெண், இல்லை, ஒரு மாமி (ஆபிசர் மாறியே இருப்பாங்க) நடத்துநரிடம் கேட்கிறார். வேகமாகக் கேட்கிறார்.

'ஒடபயனிகு உரு டிகுடு குடுபா' ‍

இதன் தமிழ் அர்த்தம் கீழே

'வடப‌ழனிக்கு ஒரு டிக்கெட் கொடுப்பா'

தீபாவளிக்கு முதல் நாள் கிளம்பி தீபாவளியன்று மதியம் ஊருக்குப் போய்ச் சேர்ந்தவுடன் பெருமூச்சு விடுவீர்கள். "அப்பாடா! தீபாவளி முடிந்துவிட்டது. ம்மா. ப்பா. நான் கிளம்பறேன். தீபாவளி லீவு முடிந்துவிட்டது." அப்பா சொல்லுவார். "இந்த எலவுக்கு நீ வராமலே இருந்திருக்கலாம்".

பொங்கலுக்கும் ஒரு நாள் விடுமறை. இதெல்லாம் ஒரு டமில் பண்டிகையா என்று ஊருக்குப் போகாமல் விட்டு விடுவீர்கள். ஏரியாவுக்குள் ஓட்டல்கள் இல்லாமல் ஒரு வாரம் சோற்றுக்குச் சிங்கி அடித்திருப்பீர்கள் என்பதை யாரிடமும் நீங்கள் பகிர்ந்திருக்க வாய்ப்பில்லை.

மெட்ரோ இரயிலோ, மெரினாவின் அலைகளோ உங்களின் வெளிக்கொணரா சோகங்களை, இழிவுகளை, ஏக்கங்களை, தனிமைகளை விழுங்கிச் சென்று மீண்டும் திரும்பும் மிச்சமிருக்கும் வாழ்ப்படா உங்கள் வாழ்க்கையினை நக்கிச் செல்ல‌.

நகரம் ‍‍‍ நரகம், மாநரகம். இது எழுத்துப் பிழையில்லை. உங்கள் வாழ்க்கைப் பிழை.

ஜூன் 18, 2011

அநாதைப் பிணம்

ஆயிரக்கணக்கில் ஈக்கள்,
ஆறேழு காக்கைகள்,
ஏராளமாய் எறும்புகள்,
இரண்டு நாய்கள்.
இத்தனை உறவுகளைக் கொண்டது,
ஒரு அநாதைப் பிணமா?