ஜூலை 30, 2011

காதலின் நான் - அத்தியாயம் ஆறு

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
அத்தியாயம் ஐந்து 

அந்த இரவு எங்கள் இருவருக்கும் நேர்ந்த இடைவெளியை மீண்டும் மழை பெய்யச் செய்து நிரப்பிக் கொண்டது.

இடம் பொருள் பார்க்காமல் ஈவு இரக்கம் காட்டாமல் வருகின்ற காதல், வந்த வழியே சொல்லிக் கொள்ளாமல் திரும்பிச்சென்று விடுகிறது, மழை மேகங்களைப் போல‌.

அன்றைய மாலைப்பொழுதில் தெருவில் நின்று பிறர் காண‌ கண்ணீர் விட நேரிடும் என்று முன்னமே எதிர்பார்க்கவில்லை.

உங்களில் பெரும்பாலானோர் பின்னால் வாகனம் வருவது அறியாமல் மோதி விழுமுன் வசை வாங்கியிருந்திருப்பீர்கள் என்று தோன்றவில்லை.

டெலிபோன் பூத்தில் வரிசையில் காத்திருப்போரை மறந்து கதறும் வாய்ப்பு உங்களுக்கு கிட்டியிருக்காதென்றே நினைக்கிறேன்.

பிரிவிற்கான‌ காரணத்தைக் கண்டறிந்து களைய முற்பட்டேன். எத்தனையொ முறை மன்றாடிக் கேட்டுப் பார்த்தேன். "என்ன குறை கண்டாய் என்னில்?" என்று.

அவள் தந்த பதில்கள் அனைத்துமே மௌனம் மட்டும் தான். உலகிலேயே மிகவும் கொடூரமான‌ ஆயுதம் மௌனம் மட்டும் தான். எனக்கு அந்த மௌனம் சம்மதமில்லை.

காதல் என்ற போதைக்கு அடிமையானவனை எதுவுமற்ற அறையில் திடீரென்று அடைத்துவிட்டாள்.

மீண்டும் குழந்தையாக்கி அழகுபார்த்துவிட்டு கொடுத்த‌ பொம்மையைப் பிடுங்கிக்கொண்டாள்.

‌நம்பிக்கை துரோகம் என்பது வாழ்க்கையில் எத்தனை பக்குவப்பட்டவனையும் கூட எதற்கும் கவலைப்படாதவனையும் கூட அழவைத்துப் பார்க்கும் ஆயுதம். அவளுடைய அந்த கூர்மையான கேள்விக்கணைக்கு உள்ளான நிராயுதபாணியாகிப் போனேன்.

ஒரு உறக்கம் தொலைந்த அதிகாலையில் என் கைபேசி அழைப்புகளை ஏற்பதையும் கூட நிறுத்திக் கொண்டாள்.

அது போன்ற தருணங்களில் கோபம், வெறுப்பு, சோகம், பயம், பொறுமை: இவையனைத்தும் ஒரு சேர ஒருவனை ஆட்கொண்டால் என்னவாகும்?

பல் துலக்காமல் குளிக்காமல் அவள் விடுதியினைத் தாண்டி தினமும் அவள் செல்லும் வழியில், அடைக்கப்பட்ட ஒரு கடையின் வாசலில் அமர்ந்து இந்த வழியில் வருவாளா? மாட்டாளா என்றே தெரியாமல் காலை முதல் மாலை வரை மாலை முதல் இரவு வரை சாலையினையே வெறித்துப் பார்த்து ஏங்கிச் செத்த நிமிடங்கள் இன்னும் நெஞ்சில் இரணமாய் இருக்கின்றன‌.

எதையோ தொலைத்து விட்ட பதற்றமும் பரிதவிப்பும் மனதில் அமைதியை கலைத்துவிட்டன. ஒவ்வொரு விநாடியும் அவள் என்ன செய்கிறாள்? எங்கு இருக்கிறாள்? என்று தெரிந்து வைத்துக்கொண்டிருந்த மனம் தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் பல்லியின் உடலிலிருந்து அறுபட்ட வாலினைப் போல் துடிக்கிறது.

இந்த உலகில் நண்பர்கள் போல் நடிக்கத் தெரியாத அப்பாவிகளே காதலித்து அவதிப்படுகிறார்கள்.

நட்பையும் காதலையும் ஒரு சேரத் தொலைத்த முட்டாளாகிப் போனேன். நண்பர்கள் காதலர்களாக மாறிக்கொண்டிருக்கையில் நட்பு இருவருக்கும் உள்ள நெருக்கத்தில் நசுங்கிச் செத்துவிடுகிறது. காமம் அங்கே கால் நீட்டி உட்கார்ந்துகொள்கிறது. சிலருக்கு அது கூச்சத்தையும் வெட்கத்தையும் தருகிறது. சிலருக்கு அது வெறுப்பையும் அருவருப்பையும் தருகிறது. திருமணமானவர்களுக்கு அது நிர்ப்பந்தம். காதலிப்பவர்களுக்கு அது அவரவர் சௌகரியம்.

காதலை இழந்த துயரம் தாங்காமல் உயிரைக் கொடுக்கத் துணிவில்லாம‌ல் மயிரைக் கொடுத்து விடைபெற்ற இந்த ‌வெட்கங்கெட்டவனின் காதல் கதை அன்றோடு முடிந்துவிட்டது.

என்றோ ஒரு நாள் இடதுகையில் ஊசியால் எழுதிய அவளுடைய பெயர் சொல்லும் தழும்புகள் ‌இப்பொழுது மறைந்துவிட்டன.

முற்றும்

ஜூலை 26, 2011

காதலின் நான் - அத்தியாயம் ஐந்து

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு


நம் காலம் கடிதங்களைப் படிக்கப் பழகும் பருவம் தொட்டே எழுதப் பழகாத ஒரு சந்ததியினை உருவாக்கிவிட்டது. இன்றைக்கும் டைரி எழுதும் பழக்கமுடையவர்களைப் போல் நானும் அவளிடம் எழுதிக் காண்பித்திருக்கிறேன், சில காதல் கடிதங்களை. தினமும் பூங்காவில் சந்திக்கும் பொழுது படித்துக் காண்பித்திருக்கிறேன். மீண்டும் பத்திரப் படுத்தி வைத்திருக்கிறேன்.

நான் கல்லூரிக் காலங்களில் வரைந்த சில ஓவியங்களையும் கூட அவளிடம் காண்பித்து அவள் இரசிப்பதை நானும் இரசித்திருக்கிறேன். எனினும் அவளுடைய‌ புன்னகைக்கு ஈடாக ஒரு ஓவியத்தை என்னால் வரைய இயலாமலே போனது.

காமம் உடல் சம்பந்தப்பட்டதென்றால் அவளைத் தோழியாய்ப் பார்க்குமுன்னமே என்னுள் அது கிளர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். அது காதல் சம்பந்தப்பட்டதென்பதாலோ என்னவொ பின்னாளில் அவள் மீதான கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாதவனாகிவிட்டேன். அடக்கிவாசிக்கத் தெரியாத காதல் ஆதிவாசி நான். வீணையின் நரம்புகளைத் தீண்டாமல் இசையெழுப்ப முடியாதென்று அவளுக்குப் புரியவைக்க விரும்பவில்லை.

சில நேரங்களில் எதற்கும் பதிலளிக்கமாட்டாள். என் மீது மௌனத்தைக் காறி உமிழ்வாள் பிறர் பார்த்து பரிகசிக்கும்படி. நானோ காதலியிடம் முத்தம் பெற்றபின் உதடுகளைத் துடைத்துக் கொள்ளும் காதலனைப் போல் நடந்துகொள்வேன். என் இத்தனை காதல் அனுபவங்களின் ஊடே எத்தனை காத்திருப்புகள், எத்தனை கைபேசி இடையூறுகள், எத்தனை பெறப்படாத பதில்கள், எத்தனை கேட்கப்படாத கேள்விகள் என்பது எண்ணிலடங்கா. இருந்தும் காதல் என்ற அந்த ஒற்றை நூல் அறுந்து விழாமல் தொங்கப் பழகும் பக்குவத்தைப் பெற்றிருந்தேன்.

என் உலகைச் சுருட்டி மடித்து வாய்க்குள் வெற்றிலையாய்ப் போட்டு மென்றவள் அவள். வெந்து சிவந்தவன் நான் தான். காதலின் முதல் சந்திப்பில் இருந்த தீவிரம் எனக்குள் வெறியாய் மாறிக்கொண்டிருந்தது. அவளுக்குள் அது நீர்த்துக் கொண்டிருந்ததை நான் அறியாமலில்லை. என் காத்திருப்புகள் அவளின் நிராகரிப்புகளாக மாற எத்தனை காலம் பிடிக்கும்? பதிலற்ற கேள்விகளுக்காய் நான் ஏன் காத்துக் கிடக்கிறேன்? அவள் இட்டுத் தொடங்கி வைத்த புள்ளிகளினூடே நான் கோலமாய் ஓடிக்கொண்டிருக்கிறேன் முற்றுப்புள்ளி இருக்கும் திசையறியாமல்.

அன்றொரு நாள் மாலை பூங்கா செல்லும் வழியில் இறுக்கமான முகத்துடன் என் மேல் வீசியெறிந்த காதல் வார்த்தைகளை அள்ள முயன்றாள். சிரிக்கக் கூடாத இடத்தில் ஒருத்தி சிரித்துத் தொலைப்பதைப் போல் கேட்கக் கூடாத இடத்தில் ஒரு கேள்வியைக் கேட்டுத்தொலைத்தாள்.

"நாம் பிரிந்து விடலாமா, அருண்?"

அவள் கேட்ட முதல் கேள்வி என்னைத் தொட்டிலில் போட்டது.

அந்த இரண்டாவது கேள்வி என்னைத் தூக்கில் போட்டது.

பிரிய மனமின்றி தொங்கும்...

ஜூலை 24, 2011

காதலின் நான் - அத்தியாயம் நான்கு

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று


திருமணத்திற்குப் பின் செத்துப் போய்விடுகிற பொறுமை, தூக்கில் தொங்க விட்டாலும் காதலிக்கும் பொழுது சாகாது. எங்கள் காதலின் சாராம்சமே என் பொறுமையும் அதனை கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கிப் பார்க்கும் அவளுடைய‌ செய்கைகளும் தான்.

அந்த இரவின் மௌன‌த்தில் இருவரும் மெல்ல நடந்தோம், அந்த‌ மௌனத்தைக் களைக்கும் எண்ணமே இல்லாமல். அவள் முகத்தில் ஒரு குழந்தையிடம் தெரியும் பயமும், என் முகத்தில் தொலைந்த ஒன்று மீண்டும் கிடைத்த திருப்தியும் தெளிவாகத் தெரிந்தன, தெரு விளக்குகளின் மங்கிய ஒளியில் கூட.

விடுதியின் வாயிலில் சிறிய புன்னகையை உதிர்த்துவிட்டு அவளிடம் விடைபெற்றேன். அந்த இரவு மிகவும் கணமாகவும் நீளமாகவும் இருப்பதாக நினைத்துக் கொண்டே ஏதோ ஒரு தருணத்தில் உறங்கிப் போனேன்.

அழகிய தீயே படத்தில் "விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்" அடிக்கடி அவள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடல். இன்றும் கூட பயணத்திலோ விடுமுறை நாட்களிலோ காதுகளை உரசி பழைய நினைவலைகளில் சலனத்தை உண்டாக்கிவிடும் பாடல் அது.

"என்னிடம் ஏதேனும் குறை இருக்கிறதா அருண்?" என்று ஏதுமறியா குழந்தையைப் போல அடிக்கடி கேட்கும் அதே கேள்வியையே கேட்டுத் தொலைப்பாள். நானும் சலிக்காமல், "தற்போதைக்கு உன்னிடம் குறையேதும் இல்லை. இருப்பின் புகார் தருகிறேன். தக்க நடவடிக்கை எடு." என்று சிரித்துக் கொண்டே பதிலளிப்பேன்.

தன் அம்மாவின் சமையலை மிகவும் நேசிப்பாள். அதனை தவறவிடுவதை எண்ணி அடிக்கடி வருத்தமடைவாள் என்னைப் போலவே. பூங்கா தவிர்த்து நாங்கள் வழக்கமாக சந்திக்கும் பழச்சாற்றுக் கடையில் அவளை அடிக்கடி காணமுடியும், என்னுடன் சேர்த்தோ அல்லது அவளுடைய நண்பர்களுடன் சேர்த்தோ. ஒரு முறை கடைக்காரர் அரை மணி நேரமாக என்ன பழச்சாறு வேண்டுமென்று எங்கள் இருவரையும் கேட்ட வண்ணம் இருந்தார். நான் அவளைக் கைகாட்ட அவள் என்னைக் கைகாட்ட அந்த விளையாட்டு எங்களுக்கு மிகவும் பிடித்தமானதாகி விட்டது.

கடலின் அலைகளைப் போன்று அவள் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பாள். கரையாய் நான் காய்ந்து நனைந்து காய்ந்து நனைந்து காத்துக் கிடந்தேன்.

அலைகள் ஓய்வதில்லை, பாயும்...

ஜூலை 20, 2011

காதலின் நான் - அத்தியாயம் மூன்று

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு

எல்லா காதலர்களையும் போல நாங்கள் பனிக்கூழ் (அதாங்க ஐஸ்கிரீம்) பார்லருக்கெல்லாம் சென்று காதலித்ததில்லை. ஆனால் ஒரு முறை தொலைபேசி உரையாடலில் நான் ஒரு படத்தின் காட்சியை அவளிடம் விவரித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஐஸ்கிரீம்னாலே அந்தக் காட்சி தான் ஞாபகத்திற்கு வருவதாய் கூறிக் கொண்டிருந்தேன். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ப்ரதாப்,‍  ஸ்ரீதேவி ஐஸ்கிரீம் சாப்பிடுவதைப் பார்த்து ஒரு வசனம் பேசுவார், "நான் அந்த ஐஸ்கிரீமா இருக்கக் கூடாதான்னு நெனிக்குறேன்" என்று. எங்களின் இந்த உரையாடலுக்கு நடுவில் எங்கோ யாரோ ஐஸ்கிரீமாக மாறியிருந்திருப்பார்கள் தானே?

காதலில் காத்திருப்பு எத்தனை சுவாரசியமானது தெரியுமா? அது நிழற்கடிகாரத்தில் கூட நேரம் பார்க்க விடாது. அவளுக்காகக் காத்திருப்பது ஒரு தவம். அவளின் வருகையே வரம். அது கைபேசி அழைப்பாகட்டும், வேறொரு இணைப்பு துண்டிக்கப்பட்டு என் அழைப்பு ஏற்கப்படும் வரை காத்திருப்பேன். பூங்காவாகட்டும், அவள் வரும் வரை காத்திருப்பேன். வராமல் போனாலும் கூட காத்திருப்பேன் பொறுமை தீரும்வரை.

இப்படித்தான் ஒரு நாள் மாலை நான்கு மணி இருக்கும். இன்னும் பூங்கா திறக்கப்படவில்லை. நானும் திறக்கும் வரை காத்திருந்தேன். அவளுக்காக திறந்தும் காத்திருந்தேன். யார் யாரோ வந்தார்கள். என்னை கடந்து சென்றார்கள். பூங்காவை வட்டமடித்தார்கள். நான் மட்டும் அங்கிருக்கும் சாய்ந்த நாற்காலிகளில் ஒன்றாய் அசைவற்று சாய்ந்து காத்திருந்தேன், இரவோ பகலோ பாராமல் தனிமையில் எதனையோ எதிர்நோக்கி காத்திருக்கும் ஒற்றைப் பனைமரங்களைப் போல்.

இரவு ஒன்பதுக்கு மேல் ஆகியும் அவள் வருவதாய்த் தெரியவில்லை. என் இருபத்தியோரு அழைப்புகளுக்கும் எந்த பதிலும் இல்லை. என்ன ஆயிற்றோ? ஏது ஆயிற்றோ? என்ற படபடப்பு ஒரு பக்கம்.  பூங்கா கதவடைத்த சோகம் ஒரு பக்கம். எத்தனை தவிப்பு. எத்தனை எதிர்பார்ப்பு. எச்சில் கூட விழுங்காமல் ஏனோ இத்தனை தீவிரம். அழைப்பேதும் வரவில்லை. அவளே வந்தாள். மணி ஒன்பது நாற்பது. அந்த பெயர் மறந்த இளைஞன் பத்து நிமிடங்களுக்கு முன் தான் சென்றிருந்தான்.

என் காத்திருப்பும் பரிதவிப்பும் நான் சொல்லாமலே இது காதலென்று அவனுக்கு உணர்த்தியிருக்கக் கூடும்.

காத்திருப்பு முடிவுற்ற‌ நிலையில் தொடரும்...
 

ஜூலை 19, 2011

காதலின் நான் ‍‍- அத்தியாயம் இரண்டு

அத்தியாயம் ஒன்று


பேருந்துப் பயணத்தில் தன்னை அறியாமல் நம் தோளில் தலைசாய்த்து உறங்கும் சக பயணியை எழுப்பிவிடக்கூடாதென்ற அக்கரையில் தொடங்குகிறது மனிதர் மனிதர் மீது காட்டும் அன்பு. அப்படி இருக்கையில் என்னை மனதார புரிந்து வைத்தவள்; என்னை முழுவதும் நேசிப்பவள்; என்னோடு வாழ்க்கை முழுவதும் பயணிக்க விரும்பும் ஒருத்தி; அவளை நினைக்கும் பொழுது வாழ்க்கை எத்தனை ரம்மியமானது என்று மனம் சிட்டாய்ப் ப‌றக்கத் துடிக்கிறது. அவளிடம் நான் எத்தனை அக்கரையுடையவனாக நட‌ந்து கொள்ள வேண்டும் என்ற படபடப்பு நெஞ்சைப் பற்றிக் கொள்கிறது.

அவளுடைய உதடுகள் பெரும்பாலும் சிரிப்பை மட்டுமே சிந்திப்பவை. இந்தப் புன்னகை என்ன விலை என்று கேட்காதீர்கள். அது வாடகைக்குக் கூடக் கிடைக்காது. மொத்தமாய் நான் குத்தகைக்கு எடுத்துவிட்டேன். நட்பில் அவள் புன்னகையை தள்ளி நின்று தரிசித்தேன். பின்னர் காதலித்தேன். அது தேன்.

எங்கள் வாழ்வின் பக்கங்களை எழுதிச் செல்ல ஒரு நோட்டுப் புத்தகம் வாங்கி பூங்கா வந்தேன், ஓர் அந்திப் பொழுதில். என் பெயரை எழுதினேன். எதுவும் நடக்கவில்லை. அருகில் அவள் பெய‌ரை மிகுந்த கவனத்துடன் எழுதினேன். இல்லை. இல்லை. வரைந்தேன் என்று வைத்துக் கொள்வோமா. இல்லை. இல்லை. தீட்டினேன் என்று வைத்துக் கொள்வோம். தீட்டி முடிப்பதற்குள் தாளுக்கும் பேனாவுக்குமான இடைவெளியில் காற்றில் மகரந்தமாய் அவள் பெயர் பிரிந்து பறந்து சென்றதை நான் கவனிக்கவில்லை. பூங்கா வாசம் வீசிப் புறப்பட்டது. தென்றல் தரையிறங்கியது. செடிகள் நடனமாடின. அவள் வருமுன் அவளின் வாசம் என்னைச் சேர்ந்தது, மழை வருமுன் மண்ணைச் சேரும் வாசம் போல. அருகினில் அமர்ந்தாள். தொலைவினில் உலகம் நகர்ந்து கொண்டது. இருவருக்கும் உள்ள இடைவெளி குறைந்திருந்தது. கேள்விப்பட்டிருக்கிறேன், இரண்டு மனிதர்களுக்கிடையில் இருக்கும் மிகக்குறைந்த இடைவெளி ஒரு புன்னகை என்று. அது அவளிடம் நிறையவே இருக்கின்றது, சேமித்து வைத்து கண்டபடி செலவு செய்ய‌.

சில நாட்கள் ஊருக்குப் போய்விடுவாள். தண்ணீர் ஊற்ற யாருமில்லாமல் வாடும் செடிகளைப் போல் நானும் வாடிப்போவேன். மீண்டும் தளிர்க்க அவள் இரயிலேறி வரவேண்டியிருந்தது.

அவளுக்கு நண்பர்கள் சற்றே அதிகம். காதலன் நான் மட்டும்தான். அவளிடம் இருப்பது கைபேசியல்ல‌, காதுபேசி. அவளுடைய கைகளில் இருக்கும் கணங்களை விட அதிகம் காதுகளிலேயே இருக்கும் கருவி அது. சுதந்திர தினத்தில் சட்டையில் தேசியக் கொடி குத்திக் கொள்கிறாளோ இல்லையோ, எல்லா தினங்களிலும் அவள் தன் நண்பர்களை நெஞ்சில் குத்திக் கொண்டுதான் திரிந்தாள். த‌ன் நண்பர்களுக்காக எதையும் செய்ய ஆசைப்படுபவள், நான் கேட்கும் முத்தங்களுக்கு பதிலளிப்பதில்லை.

காதல் வளர்ந்துகொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில் தொடரும்...

ஜூலை 17, 2011

காதலின் நான் ‍‍- அத்தியாயம் ஒன்று


காதலைப் பேசியிருப்பீர்கள். காதலைப் பழித்திருப்பீர்கள். காதலித்திருக்கிறீர்களா என்பது தான் என் கேள்வி.

சும்மா சிரித்துப் பேசியவள், மெனக்கெட்டு கவர்ந்திழுக்கப்பட்டே காதலியானவள், படிப்ஸ் காதல்கள் இவைகளெல்லாம் காதல் என்பீர்கள். நான் இல்லையென்பேன்.

அது முட்டாள்களுக்கே வரும் உணர்வு. அல்லது அறிவாளிகளை முட்டாளாக்கும் முறை.

அது வராது. வந்தால் போகாது. அப்படிப்போனால் அது வரவேயில்லை என்பது தான் உண்மை.

உண்மையான காதலின் அர்த்தம் சொல்கிறேன். அனுபவம் கேட்கிறேன். உண்டா?

இரண்டு வருட நட்பு காதலாய் மாறிய தருணம் அது. அப்போது சிந்திக்க‌வில்லை, மீண்டும் அது நட்பாக மாற வாய்ப்பே இல்லையென்று. வழக்கமான ஓர் இரவின் நீண்ட நெடிய கைபேசி உரையாடலின் ஓரிடத்தில் உடைந்து சிதறி அவளுடைய குரல் என்னில் விழுந்து தெறித்தது.

'என்னை மணந்து கொள் என்றால் நீ சம்மதிப்பாயா அருண் ?'

இரண்டு நிமிடங்கள் கைபேசிகள் இரண்டும் மௌனம் சாதித்தன. நான் இணைப்பை துண்டித்து விட்டேன். குறுக்கும் நெடுக்கும் நடந்தேன். சர்க்கரை நோயாளியாய் மாறிப்போனேன். இதயம் அதிகமாய் படபடத்தது. வியர்த்துக் கொட்டியது. ஒரு பதின்மூன்று முறை அவளை மீண்டும் அழைக்க முயர்சித்தும் தோல்வியடைந்தேன். படுக்கையில் புரண்டு புரண்டு மணி இரண்டாகிப் போனது. என்ன நினைத்தேனோ தெரியவில்லை. தைரியம் வரவழைத்து அவளை அழைத்தேன். தாமதித்தே அழைப்பை ஏற்றாள்.

சிறிய இடைவெளி விட்டு "இணைப்பில் இருக்கிறாயா?" என்றேன். ம் என்றாள். அவள் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கிறாள். அது தெரியாமல் சம்மதம் சொல்லிப் பூரித்தேன், மதில் சுவரை காதலியாய் பாவித்து காதலைச் சொல்ல ஒத்திகை பார்க்கும் ஒரு காதலனைப் போல்.

மறுநாள் 'வழக்கம்' போல் விடிந்தது எங்களுக்குப் பிடிக்கவில்லை. யாரிடமும் சொல்லவுமில்லை. இந்த உலகில் எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த ஒன்று அதுவாகிப் போனது.

இரண்டு வருட நட்பு அன்றோடு பறிபோனது பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் அதே பூங்காவில் மாலை சந்தித்தோம், முதலிரவில் சந்திக்கும் இளம் தம்பதிய‌ரின் மன‌நிலையுடன்.
ஒரு பெயர் மறந்த இளைஞ‌ன் எங்கள் பூங்கா நண்பன். தன் அக்காவின் குழந்தையுடன் வரும் அவன் எங்களை அண்ணா அக்கா என்றே அழைப்பது வழக்கம். அன்றும் அப்படியே அழைத்தான். அவள் என்னை நோக்க நான் அவளை நோக்க நாங்கள் இருவர் சிந்திய புன்முறுவலில் காதல் பிறந்தது.

நான் மழைக்குக் கூட கோவிலில் ஒதுங்காதவன், அந்த இரவின் சாரல் மழையில் அவளுக்காக ஒதுங்கினேன். அவள் என்னை அர்ச்சனைக்கு அழைக்கமாட்டாள் என்று எனக்குத் தெரியும். இருந்தும் கூடவே சென்றேன். கண்களில் ஒற்றிக்கொண்டு துள‌சி வாங்கினாள். நான் குங்குமம் பெற்றேன். அடுத்து என்ன நடந்திருக்குமென்று இப்போது நீங்கள் யூகிப்பது எனக்குப் புரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதான் நடந்த‌து. அவள் எதிர்பாராமல் அவள் நெற்றியில் திலகமிட்டேன். எத்தனை சினிமா பார்த்திருக்கிறோம், இது கூடத் தெரியாத மரமண்டையா நான்.  அது இருக்கட்டும், அவள் கண்கள் கலங்கியிருந்தன. மழை குறைந்திருந்தது.

ஒரு குடையின் கீழ் இருவரும் நடந்தோம். குடையும் மழையும் எங்களுடன் சேர்ந்தே நடந்தன.  மழைத்துளி படாமலிருக்க நாங்கள் நன்றாகவே பட்டுக்கொண்டோம். இந்தக் குடையின் அளவிலேயே ஒரு குடிலும் வாகனமும் இருந்தால் வாழ்க்கை எத்தனை அழ‌காக பயணித்திருக்குமென்று நினைத்துக் கொண்டே நடந்தோம். அவளையும் குடையினையும் அவளுடைய விடுதியில் விட்டுவிட்டு  நானும் மழையும் மெல்ல நடந்தோம் அடுத்த தெருவில் உள்ள என் அறை நோக்கி. எங்கள் முதலிரவு அன்று நடக்கவில்லை.

காதல் வளரும் என்ற நம்பிக்கையில் தொடரும்...

ஜூலை 01, 2011

என் இறந்தகாலம்

இது என் இறந்தகாலம் பற்றி நான் எழுதும் சுய இரங்கல் கடிதம். முடிந்தவரை எழுதக்கூடாது என்பதையே தீர்மானமாகக் கொண்டிருந்தேன். எழுதித்தான் ஆகவேண்டுமென்று ஏதோ ஒரு தருணத்தில் இரக்கமின்றி இக்கடிதத்தை எழுதிவிட எத்தனித்துவிட்டது என் அடங்காமனம்.

தேனிப்பக்கம் ஒரு சிறிய கிராமத்தில், 26 வருடங்களுக்கு முன்னர் பிறந்தவளும், 10 வருடங்களுக்கு முன்னர் இறந்தவளும் நான். என் அப்பா ஒரு லாரி ஓட்டுநர். அம்மா ஒரு சத்துணவுக்கூட ஊழியர். எனக்கு ஒரு சகோதரன், ச‌கோதரி. வீட்டிலும் சரி, வாழ்விலும் சரி, நான் கடைக்குட்டி. 3 வயதுவரை ஓடியாடி விளையாடிக்கொண்டு தான் இருந்தேன். ஒரு நாள் கால் தவறி சாக்கடையில் விழுந்துவிட்டேன். அன்றே காய்ச்சலில் படுத்தேன். நாட்கள் சென்றன. என் கால்கள் செயலிழந்தன. நாட்கள் சென்றன. சரியாக வார்த்தைகளை உச்சரிக்கப் பழகுமுன்னே பேச்சை இழந்தேன். என் உடலில் இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது; இதயம் துடித்துக்கொண்டிருந்தது. உணவு உட்சென்று வெளிச்சென்று கொண்டிருந்தது. சில நேரம் சிரிப்பும், சில நேரம் அழுகையும், சிணுங்கல்களும் இன்னும் சில புரியாத உணர்வுகளையும் வெளிக்காட்டுவேன். வாழ்க்கை அவ்வளவே. என்னைத் தரையில் போட்டால் முதுகுப்புறம் காப்புக்காய்த்து விடுமென்று தொட்டிலில் கிடத்திவிடுவார்கள். என் வாழ்நாளில் ரொட்டியும் பாலும் மட்டுமே உயிர் நாடிக்கு உரமாயின. முடிந்த அளவு முயற்சித்தும் மருத்துவமோ மாந்திரீகமோ கைகொடுக்கவில்லை.

என்னோடு வாழ்ந்து எனக்கு முன்னரே இறந்த ஒரு ஜீவன், என் அப்பத்தா மட்டும் தான். அவளுக்கும் எனக்கும் ஒரே வேறுபாடுதான். அவளுக்கு எல்லாம் தெரியும். எனக்கு எதுவுமே தெரியாது. அவ்வளவுதான்.

எங்கள் வீட்டில் ஒரு மேசைக் கடிகாரத்தைப் போல், ஒரு சுவர் கடிகாரத்தைப் போல், நானும் ஒரு அசையாப் பொருளாய்த் துடித்துக் கொண்டிருந்தேன், எந்த நாளில் என் நொடிமுள் நிற்குமென்று தெரியாமல். நீங்கள் சந்தித்திராத அனுபவங்களை நான் சந்தித்திருக்கிறேன். ஒரு சுவரில் ஊரும் பல்லி கண் சிமிட்டுவதை, இன்னொரு பல்லி அதனை புணர்ந்துவிட்டு செல்வதை, ஒரு பூ மொட்டுவிட்டு மலர்வதைக் கண்கூடாகக் காணுவதைப் போன்ற அனுபங்களைப் பெற்றிருக்கிறேன். நான் வாழ்ந்துகொண்டிருப்பதாய் உணர்வதைவிட மற்றவர்களின் வாழ்வை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதே உண்மை.

எல்லோரும் வளர்ந்தார்கள். நான் மட்டும் சுருங்கினேன், தலையைத் தவிர்த்து. இரத்தம் சுண்டி வெளிர் மஞ்சள் நிறத்தில் என்தோல் மாறிப்போனது. என் அப்பா என்னை மட்டும் சிவப்பாகப் பெற்றதாக அடிக்கடி பெருமை கொள்வார். வாரத்தில் இரண்டு நாளேனும் தொட்டிலுக்குள் தலைவிட்டுப் பார்ப்பார். ஓரிரு வார்த்தைகளில் கொஞ்சுவார். அந்த ஒரு சிறிய மகிழ்ச்சியை மட்டுமே அவருக்கு என்னால் அளிக்க முடிந்தது.

என் உடலில் பெண்மையை அடையாளம் காட்டிக்கொண்டிருந்தது என் கூந்தல் மட்டுமே. அதனையும் மூன்று மாதங்களுக்கொருமுறை கத்தரித்து எறியும் பொழுதெல்லாம் என் அம்மா அழுதுகொண்டு தான் அதனை செய்து முடிப்பாள்.

எத்தனையோ நாட்கள் எறும்புகளுக்கு இரையாகிருக்கிறேன், எந்த சலனங்களும் காட்டாமல். பள்ளி முடிந்து வீடு திரும்பும்‌ என் அக்கா கதறித் துடித்து என் கண்களை மேயும் எறும்புகளைக் களைவாள். என் அண்ணன் கண்கள் பொங்கி எட்ட நின்று பார்த்துக் கொண்டிருப்பான்.

என்னைச் சுற்றி வீசும் மூத்திர நெடி என் குடும்பத்தின் ஒரு அங்கமாகிப் போனது.

ஒருவேளை என் பிறப்பை தள்ளிப்போட்டிருந்தால் எனக்குப் பதில் யாரோ பிறந்திருப்பார்கள். நான் தப்பித்திருப்பேன். பாருங்கள், என் பிறப்பை தள்ளிப்போடத் தெரியாத என் பெற்றோருக்கு என் இறப்பை இத்தனை காலம் தள்ளிப்போடத் தெரிந்திருக்கிறது.

என் அம்மா நான் இருந்தும் அழுதாள். செத்தும் அழுதாள். நான் மட்டும் எப்பொழுதும் போல் சலனமற்றே கிடக்கிறேன். என்னை நான்குபேர் தூக்கிச் செல்கிறார்கள். நான் வானம் பார்க்கிறேன். இத்தனை வருடங்களாகியும் அது நிறம் மாறவே இல்லை. என் இறந்தகாலத்தின் ஏதொ ஒரு மாலைப்பொழுதில் எவரும் அறியாமல் என்னையும் அறியாமல் நான் பூப்பெய்திருப்பேனா என்று நினைத்துப் பார்க்கிறேன். வாழ்க்கை அற்புதம். சிலருக்கு அது சொர்க்கம். சிலருக்கு அது நரகம்.
 

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.