ஆகஸ்ட் 25, 2011

ஒதட்டழகி



ஊருக்குள்ள ஒதட்டழகி
உன்ன விட்டா ஆரிருக்கா?
உன் ஒதட்டோர மச்சத்துக்கு
வேறேதும் பேரிருக்கா?

வடிச்சு வச்ச செலையாட்டம்
வயலோரம் நிப்பவளே!
பிடிச்சு வச்ச பிள்ளையாரா
நா மயங்கி நிக்கிறேன்டி!

உச்சி வெயுலுதான்,
உன்னப் பாத்தப்புறம்
எட்டுத்தெச மேகமெல்லாம்
கிட்ட வந்து நிக்குதடி.
காத்து என்னச் சுத்துதடி.
கனகாம்பரமும் வீசுதடி.

நீச்சத்தண்ணி சொம்புக்குள்ள‌
இனிப்பக் கலந்தியா? இல்ல‌
உன் நெனப்பக் கலந்தியா?
தொண்டக்குழி நனையுமுன்ன‌
ஒடம்பெல்லாம் சிலுக்குதடி.

பூப்பூவா இட்டிலியும்
பூண்டு மணக்க‌ சட்டினியும்
ஆவிபறக்க நீ தந்தா
அசராம எறங்குமடி.

நான் குடிச்சக் கஞ்சியில‌
கடசி பருக்க ஓஞ்சொத்தா?
மீசையில ஒட்டுனாலும்
ஆசையில கேக்குறியே!

உன் கெண்டக்காலு மஞ்சளெல்லாம்
ஊருக்கெல்லாம் சேதி சொல்ல‌
என் நாலுமொல வேட்டியில‌
நல்லாவே ஒட்டிக்கிச்சு.

எந்தக்காட்டு மழ வந்து
ஏங்கனவ கெடுத்துருச்சு?
எவன் வச்ச செய்வெனையோ?
நின்ன‌ மரம் படுத்துருச்சு.

நெஞ்சக் கீறி உள்ளார
என்னத்த பொதச்சீயோ?
வளந்து மரமா நிக்குதடி.
இரணமா குத்துதடி.

சீம‌த்தொர கெடச்சாலும்
சீமானே வந்தாலும்
நீதான்டா என் உசுரு. நாந்தான்டா உன் கொசுறுன்னு
வசனமெல்லாம் பேசுனியே?
கனவெல்லாம் வீசுனியே?

எங்கேடி போனவ நீ?
எந்தச் சீமையில வாக்கப்பட்டுப்போனவ நீ?

கூடுவிட்டு கூடுபாயும்
வித்த ஒன்னக் கத்துட்டு
நீ விரும்பும் எவனுக்குள்ளயும்
புகுந்து வாழ நான் வாரேன்.

ஆகஸ்ட் 18, 2011

மழை

முகிலெடுத்து வான்வெளி
முத்துமழை தூவியது.
மழை மண்ணைச் சேருமுன்னே
மண்வாசம் என்னைச் சேர்ந்தது.

பூக்களிலே தேனெடுத்த
பொன்வண்டுகள் காணவில்லை.
பூங்காற்றில் புழுதியெலாம்
போன இடம் தெரியவில்லை.

நீர்வடியும் இலைகளிலே
நேற்றில்லா நடுக்கங்கள்.
நீலவானில் கீறல்விடும்
நீளமான சுருக்கங்கள்.

மரக்கிளையில் பறவையெலாம்
கூடுகளில் குளிர்காய
அடிக்கடி பயமுறுத்தி
அலறுகிறது இடியோசை.

காடுகளில் நீரோட
வண்ணமயில் நீராட
ஈரக்காற்று என் ஈரல் தொட்டது.

தூரலின் இரைச்சலை
தொடங்கியதும் நான் இரசிக்க
இடைவந்த இடரொன்றாய்
தவளைகள் கர்ஜிக்க
தரைமேல் வெப்பமெலாம்
தலைதெறிக்க ஓடக்கண்டேன்.

தட்டுகளில் நீர்தெறித்து
தாளங்கள் எழுகையிலே
மிச்சமுள்ள வறட்சியெலாம்
மாண்டுபோக நான்கண்டேன்.

இறங்கிவந்து மண்மேலே
ஈரக்கவிதை மேகமெழுத
இயற்கையின் குளியலை
இரகசியமாய் எட்டிப் பார்த்தேன்.

மெய்மறந்து இரசிக்கையில்
முழுக்க நனைந்து நான் நின்றேன்.

ஆகஸ்ட் 13, 2011

காதல்

இதயத்தின் நான்கறைகளிலும்
இடியுடன் கூடிய மழை.

உன் மூச்சுக்காற்றின் மூலக்கூறுகள்
என் நுரையீரலை வட்டமிட்டபடியே.

உன் நிழல் தீண்டித்தீண்டியே
என் ரேகை தேயும்.

என் நெற்றிச் சுருக்கங்களில்
உன் நினைவு விரியும்.

ஆத்திரத்தில் நான் அரைந்தாலும்
உன் கண்களின் கார்காலம்
என் கோபத்தின் கொள்ளியை அணைத்துவிடும்.

மரணத்தின் தூண்டில் என் கண்களுக்கு
மங்கலாகத் தெரிகின்றது.

இப்பொழுது என்னுடலில்
இதயம் மட்டுமே அசைகிறது.

அன்பே! நம் மணிவிழா முடிந்தாலென்ன?
என் மனமின்னும் மார்க்கண்டேயன்,
நம் காதல் இன்றும் சிரஞ்சீவி தான்.
இது உன் கல்லறைமீது சத்தியம் கண்மணி.

ஆகஸ்ட் 08, 2011

அழகி

என் ஊரில்
நீ குடியேறிய நாள்முதலே
பூமி எனக்குப் புலப்படாமல் போனது.

ஒவ்வொரு விடியலும்,
உன்வீட்டு வாசல் ஒரு
உலகவரைபடத்தை எனக்குப் பரிசளிக்கிறது.

நான் அழுவதும் சிரிப்பதும்
அடிக்கடி நிகழ்ந்துவிடுகிறது, இப்பொழுதெல்லாம்.

நான் கண்ணிமைக்கும் கனத்தை
ஒரு இரவு தக்கவைத்துக்கொள்ளும்
அவசரம் புரியவில்லை.

இறுகப் பூமியைப் பற்றிக்கொண்டபோதும்
ஈர்ப்புவிசையை இழக்கிறேன் நான்.

என் விழித்திரைக்கும்
உலகிற்குமான இடைவெளியில்
கூடாரம் போட்டவள் நீ.

எல்லா இரவுகளிலும்
கனவும் நானும் உன்னைக் காண்கிறோம்.

நீ ஒரு பார்வை வீசிப் புறப்படும்
ஓர் அதிகாலைக் கனவில்,
என்னையறியாமல் நான் உறங்கிவிடுகிறேன்.