அக்டோபர் 19, 2011

காதலின் நான் - அத்தியாயம் பத்து

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
அத்தியாயம் ஐந்து 
அத்தியாயம் ஆறு
அத்தியாயம் ஏழு
அத்தியாயம் எட்டு
அத்தியாயம் ஒன்பது


மீண்டும் சந்திக்கவே கூடாதென்று வாழ்ந்துகொண்டிருந்தவர்களை காலவெள்ளம் ஒரே தீவில் ஒருவர் பின் ஒருவராக கரைசேர்த்துவிட்டது. இத்தீவை விட்டுத் திரும்பிச் செல்ல முடியாத குடும்பச்சூழலில் இருவருமே சிக்கித் தவித்தோம்.

காதலை துச்சமெனக் கருதும் நண்பர்களுக்கு இந்தப் புலம்பல்கள் எரிச்சலைத் த‌ரலாம். மேலும் பரிகசிக்கக் கூடத் தோன்றலாம். சொல்லப்போனால் காதல் என்று ஒரு தனிப்பட்ட உணர்வோ வேறு எந்த ஒரு மண்ணும் இப்பூவுலகில் கிடையாது. மனிதன் கொள்ளும் ஆசைகளில் அதுவும் ஓர் அங்கம். அவ்வளவே. நம்மிடம் சில நாட்கள் பழகிவிட்டுப் பிரியமுடியாமல் வாலை ஆட்டி நம் பின்னாலேயே ஓடிவரும் ஒரு நாயிடம் என்ன உணர்வு உள்ளதோ அவ்வளவே காதல் என்பதும் கூட. பழகிக் கலக்கும் அனைத்து உயிர்களுக்கும் காதல் பொதுவே.

பாரதிக்குத் தமிழின் மீது தீராத காதல். பாகிஸ்தானுக்கு காஷ்மீரின் மேல்.களம் வேறே தவிர காதல் ஒன்றுதான்.

வாழ்க்கை சதுரங்க ஆட்டத்தைப் போன்றது. அடுத்த கணம் எந்தத் தாக்குதலுக்கும் நம்மை தயார் செய்து முன்னேறும் முயற்சியே வாழ்வின் அம்சம். அதில் முன்னெச்சரிக்கையாக செயல்படுபவனும் அனுபவப்பட்டவனுமே பிழைத்துக் கொள்வான்.

உணர்வுகளுக்கு மட்டுமே முழுதும் அடிமையானவன் இக்கலியுகத்தில் நிம்மதியாக வாழவே முடியாது. ஒரு போர்க்களத்தில் நின்று போராடும் வீரனுக்குரிய மனநிலையிலேயே வாழ்வினை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு கோழைக்கு அங்கே என்ன நடக்குமென்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அப்படிப்பட்ட ஒரு கோழையாக உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு குற்றவாளியாக நிற்கின்றேன்.

நான் என்ப‌து யாதெனின் ‍-
  • மனதைக் கல்லாக்கும் கலையை அறிந்திராதவன்;
  • பூவிதழின் மென்மையினை விடவும் மெல்லிய இதயத்தைக் கொண்டவன்;
  • காதலை இட்டுச்செல்லவும் அப்படியெ விட்டுச்செல்லவும் தெரியாதவன்;
  • வரலாற்றில் இலக்கியங்களில் திரைப்படங்களில் வாழ்ந்து மறைந்த காதலை வாழ்வோடு பொருத்த முயன்று தோற்றவன்;
பொங்கிப்பெருகி ஓடும் நதி, வற்றி மீண்டும் ஓடையாய் இளைத்தோடும் வேளையில் உயிர் பெற்று உருவாகி நீந்தும் மீனுக்குத் தெரியுமா, வலையில் சிக்குவோமா? ஓடை வற்றும் வெயிலில் சிக்குவோமா என்று.

- நதி பாயும்

காதலின் நான் - அத்தியாயம் ஒன்பது

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
அத்தியாயம் ஐந்து 
அத்தியாயம் ஆறு
அத்தியாயம் ஏழு
அத்தியாயம் எட்டு

பழைய பஸ் பாஸை ரினீவல் செய்யலாம். பழைய காதலை ரினீவல் செய்ய இயலுமா?

நான் இராமச்சந்திரமூர்த்தியும் இல்லை. இராவணனும் இல்லை. ஆனால் என் கதையில் வேண்டுமென்றே ஒரு சூர்ப்பனகை உருவாக்கப்படுகிறாள்.

அன்றும் சரி. இன்றும் சரி. அவள் செய்வதற்கெல்லாம் சித்ரவதை என்று தான் பெயர். ஆனால் இந்த தேவதையின் திருவிளையாடல்களில் எனக்குச் சம்மதமில்லை.

பந்து உதைபட்டுத் திரும்பலாம். இந்த பாழாய்ப்போன காதலுமா?

ஓர் இரவில் மனைவியறியாமல் பரண் மேல் பல வருடங்களாக உறங்கிக் கொண்டிருந்த காதல் மடல்களையும் வாழ்த்து அட்டைகளையும் எடுத்துப் புரட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன்.

பழைய நினைவுகள் கண்முன்விரியத் தொடங்கின.

ஆறு வருடங்களுக்கு முன் ஒரு மழை நாளில்... இந்த மழை வரும் பொழுது காதல் வருகின்றதா? அல்லது காதல் வரும் பொழுதெல்லாம் மழை வருகின்றதா என்று வெகு நாட்களாகவே எனக்கொரு சந்தேகம்.

ஆறு வருடங்களுக்கு முன் ஒரு மழை நாளின் மாலை நேரத்தில் அவளுக்கு "அசைவம்" சலித்து விட்டதோ என்னவோ ஒரு உயர்தர சைவ உணவகத்திற்கு என்னை அழைத்துச் சென்றாள். "அருண்! இங்கு சில ஸ்பெஷல் ஐட்டங்கள் கிடைகும். சாப்பிட்டுப் பார். அசந்து விடுவாய்!" என்றாள். நான் மனதுக்குள் ஒன்றை நினைத்துக் கொண்டே அவளைப் பார்க்கிறேன். அவள் "ச்சீ" என்றாள்.

"ஏ அருண்! இங்கு குழிப்பனியாரம் ரொம்ப ஸ்பெஷல். ரெண்டு ப்ளேட் குழிப்பனியாரம் கொண்டு வாங்க".

எண்ணெய் சொட்டச் சொட்ட காரக் குழிப்பனியாரமும் கொத்துமல்லிச் சட்னியும் எங்கள் மேசையில் வைக்கப்பட்டன. அவள் ஒரு பனியாரத்தைப் பிய்த்து சிறு துண்டை சுவைத்து விட்டு கன்னத்தில் குழி விழ பூரித்தாள்.

"இதுதான் அந்தக் குழி. நான் தான் அதில் விழுந்த பனியாரமோ?" என நினைத்துக் கொண்டேன். அந்த மாலைச் சிற்றுண்டியின் இறுதியில் அவள் கொடுத்து அச‌த்திய வாழ்த்து அட்டை இன்னும் முனை மடங்காமல் அவள் வாசம் குறையாமல் அப்படியே இன்றளவும் இருக்கிறது.

ஒரு அலுவலக நாளில் கலாசார உடையணிந்து அனைவரும் வரவேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள். அன்று முற்பகல் இடைவேளையில் நான் என் தளத்திலிருந்து படியிறங்கிக்கொண்டிருந்தேன். எதிரில் அவள் என்னைக் கடந்து படியேற நான் சற்றே திகைத்து நின்றேன்.

அதே புடவை. அதே கருஞ்சிவப்பு(maroon) நிற பட்டுப்புடவை அணிந்திருந்தாள். அந்தப் புடவையை என்னால் அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது. நான் பார்த்துப் பார்த்து வாங்கிப் பரிசளித்த புடவை அல்லவா அது.

எது நடந்ததோ அது அன்று நன்றாக நடக்கவில்லை. மறந்தேன்.
எது நடக்கின்றதோ அதுவும் இன்று நன்றாக நடக்கவில்லை. சரிகின்றேன்.
எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாக நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

சில சமயங்களில் நிகழ்காலத்தை எட்டிப் பார்க்கும் இறந்தகாலம், எதிர்காலத்தை குலைத்துவிடுகிறது.

- கால‌ச்சக்கரம் சுழ‌லும்

காதலின் நான் - அத்தியாயம் எட்டு

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
அத்தியாயம் ஐந்து 
அத்தியாயம் ஆறு
அத்தியாயம் ஏழு


என்னை அன்று மயக்கிய அந்தப் புதுநிறம் இன்று அவள் முகத்தில் காணக்கிடைக்காத பொக்கிஷமாய் மறைந்துபோயிருந்தது. ஆடம்பரம் அவள் ஆடைகளில் தெரிந்தது. எப்பொழுதும் போல் முகத்தில் அது இல்லை. காலம் அவளை வெகுவாக உருமாற்றியிருந்தது.

சக ஊழியர் ஒருவர் மூலம் அறிந்த ஒரு தகவல் என் மீதான அடுத்தகட்ட தாக்குதல். அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இத்தனை நாள் வேலையில் கொண்டிருந்த ஈடுபாடு எங்குபோனதென்று தெரியவில்லை. அலுவலகத்தின் வாயிலில் வைக்கும் முதல் காலடி தடுமாற்றத்துடனே துவங்குகிய‌து.

வீட்டில் கட்டிய மனைவியும், அலுவலகத்தில் முன்னால் காதலியும் ‍ இரவு பகல் போல மாறி மாறி என்னை முற்றுகையிடும்  மர்மம் என்ன‌?

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு
மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு
விலகத் தெரியாதா?

----

இரண்டு மனம் வேண்டும்.
இறைவனிடம் கேட்டேன்.
நினைத்து வாழ ஒன்று.
மறந்து வாழ ஒன்று.


இப்பொழுது புரிகிறது இதுபோன்ற பாடல்கள் யாருக்காக‌ எழுதப்பட்டன என்று.

ஓடி ஒதுங்கி வாழ்ந்தவன் இன்று பதுங்கி ஒழிந்து வாழ்வதில் என்ன நியாயம்
இருக்கிறது?

மழையும் வெயிலும் மாறி மாறி வரலாம். இரண்டும் ஒரு சேரத்தோன்றி என் முன் ஒரு வானவில் நிறமற்று விரிகிறது. கிரகணம் போல் இருட்டிக்கொண்டு வருகிறது. என் செய்வேன்?

நிழலுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் இல்லாத நிலை என்ன நிலை?
இடி இடிக்கிறது; மின்னல் வெட்டுகிறது; மழைவர மறுக்கும் நிலை என்ன நிலை?

என்றோ அடைய விரும்பிய காதலி இன்றளவும் கரை சேராமல் இருக்கிறாள். என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. எனக்குத் திருமணமாகியிருக்கும் என்று அவளுக்கு முன்னரே தெரிந்திருக்கக் கூடும்.

இரண்டு வாரங்கள் இப்படியே கழிந்தன. அலுவலக வாயிலில் ஒரு மாலைநேரத்தில் கொட்டும் மழை நின்றபின் வீடு செல்ல காத்து நின்றேன்.

"அருண்! நீ இங்கு தான் வேலை செய்கிறாய் என்று முன்னரே தெரிந்திருந்தால் இங்கு நான் வேலைக்குச் சேர்ந்திருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடு" என்று கூறிவிட்டு இமைக்கும் கணத்தில் மழையைப் பொருட்படுத்தாமல் அவள் என்னைக் கடந்து சென்றாள்.

அன்று மாலை இடியுடன் கூடிய அடைமழை என் நெஞ்சுக்குள் பெய்ய ஆரம்பித்தது.

 - மழை இன்னும் பெய்யும்

காதலின் நான் - அத்தியாயம் ஏழு

அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு
அத்தியாயம் ஐந்து 
அத்தியாயம் ஆறு

முற்றுப்பெற்ற காதல் கதைகள் தொடருவதில்லை என்று யார் சொன்னார்கள்?

பழைய நாளிதழ்களையும் பழைய பொருட்களையும் எடைக்குப் போட்டுவிடும் நாம் பழைய காதலை என்ன செய்கிறோம்?

இன்றைய காலகட்டத்தில் முகநூலிலோ அகநூலிலோ எங்கோ ஓர் மூலையில் பழைய காதலி ஒழிந்து கிடக்கத்தான் செய்கிறாள்.

இருவேறு திசை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிய முன்னால் காதலர்கள் சிற்சில ஆண்டுகளுக்குப் பின் ஓர் பயணத்தில் எதிரெதிரே சந்திக்க நேர்ந்தால் என்னவாகும்? பூமி தட்டையாகவே இருந்திருக்கலாம் என்றுகூட தோன்றும்.

உலகிற்குத் தெரியாமல் கரைந்துபோன ஒருவனின் காதல் கதை பின்னொரு நாளில் மனைவிக்குத் தெரியாமல் மீண்டும் தொடருமா தொடராதா என்று‌ யார் கண்டது?

 அந்நாளில் அவள் தந்த காதல், நட்பென்ற ஒரு குளத்தில் கல்லெறியும் சலனத்தைத் தந்தது. ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எதிர்பாராமல் சந்தித்த வேளை, ஒரு ஆழ்கடலின் அமைதியைக் குலைக்கும் பூகம்பத்தால் எழும் ஆழிப்பேரலையாக, சுனாமியாக என் உள்ளத்தில் ஒரு சலனத்தை, அதிர்ச்சியை உண்டாக்கியிருந்தது.

கணவனனென்றார்;
கட்டிய மனைவியென்றார்;
கற்பென்றார்;
கள்ளத்தனமென்றார்;

நாங்கள் மீண்டும் சந்திக்க நேர்ந்தது நான் செய்த தவறா? இல்லை நாங்கள் செய்த தவறா? தெளிந்த நீரோடையை திடீரென்று காட்டாற்று வெள்ளம் நுரைக்க வைத்து கதியற்று ஓடச் செய்வது போல் ஆகிவிட்டது மனம்.

பழைய காதலி மின்னலாய் வந்து மீண்டும் மறந்து போகலாம். நம்மை விட்டு மறைந்தும் போகலாம். ஆனால் அது என் வாழ்வில் நடக்கவில்லை. மாறாக இருவருக்கும் ஒரே அலுவலகத்தின் வெவ்வேறு தளங்களில் வேலை செய்யும் நிலை வருமென்று விதிகூட அறிந்திருக்காது.

அவளும் நோக்கினாள், அவனும் நோக்கினான் என்ற போக்கில் மீண்டெழுந்து மனச்சிறையில் மன்றாடிக்கிடந்து தவித்துக் கொண்டிருந்தது ஒரு பழைய காதல்.

 - சலனம் தொடரும்

அக்டோபர் 13, 2011

சங்கத்தில் பாடாத கவிதை (18+)

 (18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்)


ஒவ்வொரு இரவிலும்
இரண்டு அல்லது மூன்று முறை
அந்த அசம்பாவிதம் நமக்குள்
நிகழ்ந்துவிடுகிறது.

நம் உதடுகள் பரிமாறிக்கொள்ளும்
இரகசியங்களை முத்தங்கள் என்கிறார்கள்.

உன் கூந்தலோடு சேர்ந்த பூவும் மணக்கிறது.

நீ சிக்கெடுத்த கூந்தலில்
சிக்கிக் கொண்டவன் நான்.
என்னை நீ சிக்கெடுப்பது
சற்று கடினமே.

என்னால் களையப்படுவதற்காகவே
நீ செய்து கொள்ளும் அலங்காரம்
எனக்குப் பிடித்திருக்கிறது.

"என் உடையலங்காரம் எப்படியிருக்கிறது?"
என்று கேட்கிறாய்.
உன் உடையலங்கோலம் பற்றியல்லவா
நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

உன் காது மடல், கழுத்துப் பிரதேசம் என‌
பூகோள வரைபடம் ஒன்றை
வைத்துக் கொண்டு திரியும்
வாஸ்கோடகாமா நான்.

விளக்கை அணைத்துவிட்டு
உலகை இயக்கும் விளையாட்டு
அண்டத்தில் வேறுண்டா?

நம் நாலுகால் பாய்ச்சலில்
ஒரு நாகரிகம் உருவாகிறது.
உண்மை அறிவாயா நீ?

மரை கழண்ட பூமி
இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறது,
நம் கட்டில் ஆடிக்கொண்டிருப்பதைப் போல.

நாமும் இயங்குவோமாக...