நவம்பர் 26, 2012

முதுமையும் தனிமையும்

காட்டில் இருக்கும் ஒரு மரத்தின் வயது ஐநூறைத்தாண்டி இருக்கும். அது இன்னும் பிரம்மாண்டமாக நிமிர்ந்து நின்று பறவைகள், விலங்குகள் என்று பாரபட்சம் பார்க்காமல் நிழல் தந்துகொண்டிருக்கிறது. காலங்கள் மாறி மாறி எத்தனை இயற்கை இன்னல்கள், இடையூறுகள் வந்த வண்ணம் இருப்பினும் சற்றும் அசைந்து கொடுக்காமல் வேர்பிடித்து தலைத்து ஓங்கி உயர்ந்து நிற்கின்றது. அதன் முதுமையோ அதன் தனிமையோ அதனை எந்த விதத்திலும் பாதித்ததாகத் தெரியவில்லை. இயற்கையின் திருவிளையாடல்களில் விநோதமே மனிதன் தான். ஒரு மரத்தின் தனிமை, முதுமை அதனை வலுப்படுத்தும் அதே வேளையில் ஒரு மனிதனின் முதுமையும் தனிமையும் அவனை எந்த அளவிற்கு வாட்டி வதைக்கிறது என்பதை அனுபவித்தும் அருகில் இருந்தும் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.


கூட்டுக்குடும்பங்கள் குறைந்து பிழைப்பு தேடி பெரும்பான்மையான இளைஞர் கூட்டம் பரதேசம் போகும் இந்த காலகட்டத்தில் அறுபது எழுபதுகளைக் கடந்து வாழ்வின் மீதி நாட்களை தனிமையில் எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும் நம் பெற்றோரின், தாத்தா பாட்டியரின் அன்றாட முதுமை வாழ்க்கை எத்தனை கொடுமையானது என்பதனை தொலைவில் இருந்தாலும் மெல்ல மெல்ல உணர்ந்துகொண்டிருக்கும் தருவாயில் நம் இயலாமையின் வெளிப்பாடாகத் தோன்றிய வரிகளே(வலிகள்) இவை:

எழுப‌து முடிஞ்சு
எத்தன வருசமோ?
கணக்கு தெரியல - ‍‍இன்னும்
உசுரு பிரியல.

எந்திரிச்சு நின்னா
எளைக்குது.
நடந்தா ஒடம்பெல்லாம்
நடுங்குது.
கால மால தெரியல‌
கால் வீக்கம் கொறையல.
மூட்டு தேஞ்சுது
மூளை சுருங்குது.
பொலம்பாம இருக்க மட்டும்
மாத்தர மருந்தில்ல.

மகனுங்க பேரு
மனசுல இருக்கு.
பேரன் பேத்திங்க‌
மொகம் மறந்துபோச்சு.

அடுத்த தெரு
ஆண்டயன் செத்து
ரெண்டு வருசமாச்சாம்.
எம்பேத்தி சொன்னா.
இப்பத்தேன் தெரியும்.

தேதி கெழம தெரியல.
கடியாரம் ஓடல.
பல வருசமா போடாம‌
பழைய பேப்பரு இன்னும்
பரண்லயே கெடக்கு.

பென்சனும் பேப்பரும்
பெருசா தெரியுது.
தேர்தலும் திருவிழாவும்
சிறுசா தெரியுது.
தீபாவளி பொங்கல் கூட‌
வீடு நெறஞ்சா தான் தெரியுது.

பாத்ரூம் போகும்முன்ன‌
படுக்கையெலாம் நனையுது.
பச்ச கொழந்தபோல‌
பழையகாலம் திரும்புது.

எந்திரிச்சு நடக்கவா
இப்படியே கெடக்கவா?
தலயன‌ நஞ்சுபோச்சு
தண்டுவடம் வளஞ்சுபோச்சு.

விட்டத்த எத்தனமொற‌
விடாம பாத்திருக்க?
காணாத சொந்தம்தேடி
கண்ணுரெண்டும் பூத்திருக்க.

செல்போனு அலறயில‌
மெட்ராசோ? மணப்பாறையோ?
எந்தமவன் அழைக்கிறான்னு
ஏமாந்த நாள் நெறையா.

வந்து ஒக்காருமுன்ன‌
வர்ற‌ மருமக்கல்லாம்
பேர புள்ளைகளோட
பேசாம போவாக.
இருந்துட்டு போலாமுன்னு
எத்தனமொற சொன்னாலும்
காபி ஆறுமுன்ன‌
காணாம போவாக.

விசாரிக்க வாரதுபோல்
கூசாம காசுகேப்பான்.
ஒப்பாரி வைக்காம‌
ஒண்ணாந்தேதி போமாட்டான்
நான் பெத்த கடசிமகன்,
சிரவணன்னு பேருவச்சேன்.

தூக்கவோ பாக்கவோ
இருக்கயில‌ ஆளில்ல.
இருக்கவோ போகவோனு
யாருட்டயும் கேக்கல.
இப்போதைக்கு இல்லனு
எமன்கிட்ட சொல்லல‌.

பெத்த கடன் தீர்க்கும் வர‌
நின்னுநிமிந்து நடக்கும் வர‌
இம்மையிலும் மறுமையிலும்
உசுர் வாழ்ந்தா போதுமுங்க.

பூமிக்கு பாரமா
படுக்கயில விழுந்தாக்க‌
ஒறங்கும்போது பேசாம‌
பரலோகம் போயிடனும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக